tamilnadu

தமிழகத்தில் பகலில் வெப்பத்தின்  தாக்கம் அதிகமாக இருக்கும்

சென்னை, ஜூன் 2தமிழ்நாட்டின், உள்மாவட்டங்களில் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், மாலையில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், அனல் காற்று வீசுவதற்கான அபாயம் குறைந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறது. கத்திரி வெயில் முடிவுற்றாலும், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், வெயில் வாட்டுகிறது. அதேநேரம், மாலை பொழுதுகளில், மாநிலத்தின் ஒருசில இடங்களில் மழையும் பதிவாகிறது.இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது.அதில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில், அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமானமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.பெரும்பாலும் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 5 சென்டி மீட்டர் மழையும், திருப்பத்தூர், திருத்தணியில் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில், அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரைஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.பகல் நேரங்களில் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றாலும், மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பகல் பொழுதுகளில், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி வரையில் பதிவாகும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.