இந்துத்துவா சதுரங்கத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி விமர்சித்துள்ளது. இதுகுறித்து என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு மாநில பொதுசெயலாளர்
கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழகத்தில் பெரியார் சிந்தனைகளுக்கு எதிரான தாக்குதல்கள் கருத்தியல் ரீதியாகவும், வன்முறைகள் வாயிலாகவும்
இந்துத்துவா சக்திகளால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்துத்துவாவின் இச் சதுரங்கத்தில் ரஜினிகாந்த் அவர்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதும், அவரும் இதற்கு இசைந்திருப்பதும் கவலையளிக்கிறது. ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் ஆற்றிய உரை இந்துத்துவா அரங்கேற்றியுள்ள காட்சி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 1971 ல் சேலத்தில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியை குறிப்பிட்டு அது குறித்து சோ "துணிச்சலாக" கருத்து வெளியிட்டதாக
பாராட்டியுள்ளார்.அக்கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என உடனடியாக
நிரூபிக்கப்பட்டுள்ளது.
தனது கருத்து பெரும் விமர்சனத்திற்கு ஆளானவுடன் "மறுக்க வேண்டிய விசயமல்ல இது; மறக்க
வேண்டிய விசயம்" என்று ரஜினி கூறியுள்ளார்.தவறு என்று தெரிந்த பிறகும் தனது கருத்தை திரும்ப
பெறமுடியாது என்கிறார்.
நாடு முழுவதும் மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது.
தலித்துகள்,சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. மத நல்லிணக்கத்திற்கு
சவால் விடுகின்றன. தீபிகா படுகோனே போன்ற திரைக் கலைஞர்கள் துணிச்சலோடு களத்திற்கு வந்து
கண்டிக்கிறார்கள்.
50 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வை அரைகுறை தகவல்களோடு பாராட்ட முனைகிற ரஜினிகாந்த்
அவர்கள் நிகழ்கால தாக்குதல்களை கண்டு கொள்ள மறுப்பது வியப்பளிக்கிறது.சர்ச்சைக்குரிய
எச். ராஜா போன்றோர் ரஜினிக்கு ஆதரவாக களத்திற்கு வருவதே, பின்புலமாக யார் இருக்கிறார்கள்
என்பதை தெளிவாக்குகிறது.
ரஜினிகாந்த் தன்னையும் உள்ளடக்கி விரிக்கப்பட்டுள்ள சதி வலையைப் புரிந்து கொண்டிருக்கிறாரா?
வாழவைத்த தமிழகம் என்று அவரே சொல்கிற இம் மண்ணின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் இது
பங்கம் விளைவிக்குமென்பதை உணர்கிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதில் அளிக்க வேண்டும்.
மாபெரும் வெகுஜன ஊடகத்தின் மூலம் பிரபலமாகி உள்ள ஓர் திரைக்கலைஞர் மிகுந்த
பொறுப்புணர்வோடு கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட விழைகிறோம்.
அரசு பதவிகள் எதையும் ஏற்காமல் மக்கள் மத்தியில் சுயமரியாதை உணர்வை விதைத்தவர் பெரியார்.
தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பில் அக்கறை கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக
பாடுபட்ட ஓர் மகத்தான தலைவரின் வரலாறை அறிந்து பேச வேண்டும் என்றும் கேட்டுக்
கொள்கிறோம்.
இப்பின்புலத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகிலுள்ள கலிப்பேட்டை கிராமத்தில்
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியார் குறித்த சர்ச்சைகளின் தொடர்ச்சியாகவே
காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கருதவாய்ப்புள்ளது..இந்த
படுபாதக செயலைத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிப்பதோடு,
குற்றாளிகளை உடனடியாக கைது செய்திட வேண்டும்