tamilnadu

img

விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நடவடிக்கை தடையில்லை-உயர் நீதிமன்றம் 

கட்டிடங்களை வரைமுறைப்படுத்த கோரி விண்ணப்பித்திருந்தாலும், விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில், அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கட்டிடத்தின்  5 மாடிகளுக்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த  2006-ம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்ட 5 மாடிகளையும் வரைமுறைப்படுத்த அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட கோரி பில்ரோத் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஜெகநாதன் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்
வரைமுறை செய்ய கோரிய மனு குறித்து முடிவெடுக்கும் முன்பே, மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறியுள்ளார். மேலும் தங்கள் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பது, மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும், சிகிச்சை பெறுவோர் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் டீக்காராமன் மற்றும் ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, வரைமுறைப்படுத்த கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பரிசீலனையில் உள்ளதாகவும், நீதிமன்ற அனுமதியின்றி எந்த இறுதி முடிவும் எடுக்கப்பட மாட்டாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பின் இந்த வாதத்தை அடுத்து, மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 
ஆனால்வரைமுறைப்படுத்த கோரி விண்ணப்பித்திருந்தாலும், விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறி, நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.