சென்னை, ஜூன் 15- கூடங்குளம் வளாகத்தி ற்குள்ளேயே ஆபத்தான அக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கூடங்குளம் அணுஉலை தொடர்பாகப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் 2013 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 15 நிபந்தனைகளைக் கூறி, உலை செயல்பட அனு மதித்தது. அதில் முக்கியமான நிபந்தனை, அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான ஆழ்நிலை கருகூலம் வசதியை 5 ஆண்டுகளில் உருவாக்க வேண்டும் என்பது. அதாவது அணுக்கழிவுகளை அங்கேயே வளாகத்திற்குள் வைக்கக்கூடாது என்பதுதான். ஆனால் 2014 ஆம் ஆண்டு ‘ஆழ்நிலை கருவூலம்’ அமைப்பது தாமதமாகும் என்று சொல்லி (ஏ.எப்.ஆர்) உலையிலிருந்து விலகி (நீர் சேமிப்பு பேசின்) அமைக்க முடிவு செய்தது. உச்சநீதிமன்றம் கொடுத்த 5 ஆண்டுக்கால அவகாசம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்த நிலையில் மேலும் 5 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய அணுமின் கழகம் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இந்த ஏ.எப்.ஆர். வடிமைமைப்பதிலுள்ள தொழில்நுட்பம் முழுவதுமாக கைவராத நிலையில், அதை அமைப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால், மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் வேண்டும் எனக் கூறியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதி மன்றம், கூடங்குளம் அணுஉலை எரி பொருள் அதன் முழு கொள்ளளவை இன்னும் எட்டவில்லை என்றும் மேலும் 5 ஆண்டுகள் அவகாசம் வழங்கினால் ஏ.எப்.ஆர். வசதியைக் கட்டி முடித்துவிடுவோம் எனவும் தேசிய அணுமின் கழகம் கூறியிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 2022க்குள் ஏ.எப்.ஆர். கட்டி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக ‘கூடங்குளம் வளாகத்திற்குள்ளா கவே’ ஏ.எப்.ஆர். கட்டுவதற்கு பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற ஜூலை மாதம் 10ஆம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெறும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: - இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகமே. அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேமித்து வைக்க உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் ‘ஆழ்நிலை கருகூலம்’ (ஆழமான புவியியல் களஞ்சியம்) அமைப்பதற்கான இடமும், தொழில் நுட்பமும் இந்தியாவிடம் இல்லை. இந்நிலையில் ஏ.எப்.ஆர். போன்ற தற்காலிக வசதியை நம்பி தொடர்ந்து கூடங்குளத்தில் கழிவுகளை உற்பத்தி செய்வது மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதுகுறித்து மாநில அரசு கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறது. உலகம் முழுவதும் அணுக்கழிவுகளை பாது காப்பாக வைக்கும் தொழில்நுட்பத்தை எந்த நாடாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்நிலையில் சோதனை எலிகளாகத் தமிழக மக்களை மாற்றும் இந்த விபரீதமான முயற்சிக்குத் தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது. நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்த தெளிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும் வரை கூடங்குளத்தில் 2 உலைகளிலும் மின் உற்பத்தியை நிறுத்து வேண்டும். மேலும் 4 உலைகள் கட்டுவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும். கூடங்குளம் அணுஉலையின் முதல் 2 அலகுகள் குறித்த விசாரணை நடத்தி ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். போராடிய மக்கள்மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 25ஆம் தேதி நெல்லையில் அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இச்சந்திப்பின் போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஞானதிரவியம் (நெல்லை மக்களவை தொகுதி உறுப்பினர்), சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுகநயினார், வீரபாண்டியன் (சிபிஐ), அந்தரிதாஸ் (மதிமுக), தெஹ்லான் பாகவி (எஸ்.டி.பி.ஐ), எம்.எச்.ஜவா`ஹிருல்லா (ம.ம.கட்சி), வெற்றிவேல் (அ.ம.மு.க), வேணு கோபால் (த.வா. கட்சி) ஆகியோர் உடனிருந்தனர்.