சென்னை:
கருவூல கணக்குத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள கருவூலத்துறை ஆணையர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று (அக்.23) பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது.அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை மாற்றி ஒருங்கிணைந்த நிதி மற்றும்மனிதவள மேலாண்மைத் திட்டம் (ஐஎப்எச்ஆர்எம்எஸ்) கொண்டு வரப்பட்டு, விப்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அமலான பிறகு ஊழியர்கள் மாதந்தோறும் உரிய தேதியில்ஊதியம் பெற முடியாத நிலையும், பல்வேறு குளறுபடிகளும் உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதிலும், ஊதியம் இல்லாத இனங்களுக்கு நிதி பெருவதிலும் பெரும்சிரமம் உள்ளது.எனவே, இத்திட்டத்தில் நிலவும் தொழில்நுட்ப குறைபாடுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். விப்ரோநிறுவனத்திடமிருந்து இந்த திட்டத்தை திரும்ப பெற்று அரசுத் துறையான என்ஐசிமூலம் நடைமுறைப் படுத்த வேண்டும்.அனைத்து அரசு அலுவலகங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, கணினிகளை நவீனப்படுத்த வேண்டும். அதுவரை பழைய நடைமுறையிலேயே ஊதியமும், ஊதியம் அல்லாத இனங்களுக்கு பணமும் வழங்க உத்தரவிட வேண்டும். அவ்வப்போது ஏற்படும் தொழில் நுட்பக் குறைபாடுகளை சீர்செய்ய உரியதொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்குவதோடு, ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கருவூலத்துறையில் காலியாக உள்ள 3 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல் வம், பொருளாளர் மு.பாஸ்கரன் உள் ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்பின்னர் கருவூல கணக்குத் துறை ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.