சென்னை:
மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் பாரம்பரியமான பன்முகத்தன்மையைப் பாழ்படுத்தி, ஒருமைப்பாட்டினை உருக்குலைப்பது ஒன்றையே கொள்கையாகக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு, இந்தியக் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய அமைத்த 16 பேர் குழுவில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னகத்தினர் - சிறுபான்மையினர் - பட்டியலினத்தவரைப் புறக்கணித்தது, கற்றறிந்த சான்றோரின் கடும் கண்டனத்திற் குள்ளானது.
நயவஞ்சகம்...
தற்போது மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில், தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான அறிவிக்கையில், இந்தியாவின் மிக மூத்த மொழியாம் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது, கண்டனத்திற்குரிய வஞ்சகச் செயலாகும்.
கண்டனக் குரல்...
பட்டயப்படிப்பிற்கான கல்வித்தகுதியாக சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில்; நாட்டின் தொல்லியல் சான்றுகளில் அறுபது சதவிகிதத்திற்கும் மேலான சான்றுகளைக் கொண்டு விளங்கும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது, தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பாகும்.இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டை ஒழித்திட முனையும் இந்தப் பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து கண்டனக் குரல் எழுப்புவோம்!
துணைபோகும் அதிமுக
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மண்ணின் மைந்தர்களுக்கான வேலைவாய்ப் புகள் அருகி வரும் நிலையில், ரயில்வே மற்றும் மின்வாரியப் பணிகள் - ஊட்டி ஆயுதத் தொழிற்சாலை பணியிடத்துக்கான தேர்வு உள்ளிட்டவற்றில், தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் அதிகமாக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் அதிருப்திக் குரலை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தி மொழியில் கூடத் தேர்ச்சி பெற இயலாத வடமாநிலத்தவர், மின்வாரியம் தொடர்பான தேர்வுகளில் தமிழ்மொழியில் அதிக மதிப்பெண்கள் எடுத்தது எப்படி என்ற நீதிபதிகளின் கேள்வி, எதிர்காலத் தலைமுறையின் நலன் காக்கும் வகையிலானது. மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிப்புக்குத் துணை போகும் அடிமை அதிமுக. ஆட்சியின் அவலங்களையும் அம்பலப்படுத்துவோம்!இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில் “பிரதமர் மோடி ஐ.நா. மன்றம் வரை சென்று, தமிழ் மொழியின் சிறப்பையும், சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டுகின்றார் என்று செய்யப்படும் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.செம்மொழி தமிழுக்கு உரிய இடத்தை தர மறுக்கும் மத்திய பாஜக அரசு, இந்தி மொழி திணிப்பு மற்றும் சமஸ்கிருதமயமாக்கலை கொள்கையாகவே நடைமுறைப்படுத்தி வருகின்றது.
பல்வேறு தேசிய இனங்களின் மொழி, பண்பாடு உரிமையை பறித்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்கின்ற கோட்பாட்டை வலிந்து செயல்படுத்துவது, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது என்பதை மோடி அரசு புரிந்து கொள்ள வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.
******************
வாலிபர் சங்கம் கடும் கண்டனம்
தமிழை, தமிழர்களை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜிஸ் குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:-
மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தொல்லியல் துறை, தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, அரபி, பிராகிருதம் மற்றும் பெர்ஷிய மொழிகளில் முதுகலைபட்டம் பெற்றவர்கள் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் செம்மொழிகளில் மூத்த மொழியான தமிழ் மொழி படித்தவர்க ளுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள் ளது. செம்மொழி தமிழையும், தமிழர்களையும் புறக்கணிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய தொல்லியல் துறையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.மத்திய அரசின் நிறுவனங்களில் தொடர்ச்சியாக தமிழ் மொழி புறக்கணிக்கப் படுவது வழக்கமாகி வருகிறது.எனவே அரசு இது குறித்த முன் கூட்டிய திட்டமிடலோடு தான் செயல் படுகிறதோ என்கிற ஐயம் எழுகிறது. எனவே இது குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். தற்போது மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.