tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சீன ஜனாதிபதிக்கு சிறப்பான பாதுகாப்பு   காவல்துறைக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னை,அக்.13- சீன ஜனாதிபதிக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக, தமிழக காவல்துறை தலைவர், சென்னை காவல் ஆணையர் ஆகியோரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். சீன ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தமிழக காவல்துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னை கிண்டி தொடங்கி மாமல்லபுரம் வரை 40 கிலோ மீட்டருக்கும் மேலாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சுமார் 15,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டி ருந்தனர்.  வழியனுப்பச் சென்ற காவல்துறைத் தலைவர் ஜெ.கே.திரிபாதியுடன் சீன ஜனாதிபதி ஜின்பிங் சென்னை விமான நிலையத்தில் கை குலுக்கினார்.  இதனிடையே சீன ஜனாதிபதிக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக, சென்னை ஆட்சியர் சீத்தாலட்சுமி, காவல்துறை திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன், சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா ஆகியோரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக புறப்படுவதற்கு முன்னதாக, அவர்கள் அனைவரையும் சென்னை விமான நிலையம் அழைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இரவு, பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்கி டாக்கியில், ஓபன் மைக்கில் பாராட்டியுள்ளார்.

சென்னை பல்கலையில்   தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு   குறைதீர்ப்பு கூட்டம்
சென்னை, அக்.13- சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்விப் பிரிவில் அக்டோபர் 19, 20 ஆம் தேதிகளில் மாணவர் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தின்கீழ் கல்வி பயின்ற, தற்போது பயின்றுவரும் மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாணவர்கள் நேரடியாக கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் றறற.னைநரnடிஅ.உடிஅ என்ற இணையதளத்தின் மூலமாகவும், இயக்குனர் தொலைதூரக் கல்வி நிறுவனம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் என்ற முகவரிக்கு தபால் மூலமும் கோரிக்கைகளை அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.