கள்ளக்குறிச்சி, பிப். 7- வாகன சோதனை என்ற பெயரில் அப்பாவி தலித் வாலிபர்கள் மீது சாதி வெறியோடு தாக்கி வன்கொடுமை செய்த கள்ளக்குறிச்சி ஆய்வாளர் டி.விஜயகுமார், வரஞ்சரம் உதவி ஆய்வாளர் ஏழுமலை ஆகிய அதிகாரிகள் உள்ளிட்ட காவலர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கச்சேரிசாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்டச் செயலாளர் பி.மணி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்என்எஸ்.வெங்கட்ராமன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.எம்.ஜெய்சங்கர், பி.சுப்பிரமணியன், எம்.கே.பூவராகன், எம்.ஆறுமுகம், ஏ.வி.ஸ்டாலின்மணி, எம்.செந்தில், டி.எஸ்.மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களான சகோதரர்கள் ஜோதிபாசு, கண்ணதாசனை வாகன சோதனை என்ற பெயரில் தாக்கி சாதி வெறியோடு காவல் நிலையத்தில் அடைத்து சித்ரவதை செய்து ஹோமோசெக்ஸில் தங்களுடன் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்த கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் டி.விஜயகுமார், வரஞ்சரம் உதவி ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், துணை நின்ற பிற காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜோதிபாசு, கண்ணதாசன் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் ஆவேசத்துடன் பங்கேற்றனர்.