tamilnadu

img

அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம்... ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணாக நிலைபாடு எடுக்க முடியாது... உயர்நீதிமன்றம் விளக்கம்

சென்னை:
மாணவர்களின் அரியர்ஸ் தேர்வு ரத்து விவகாரத்தில் அகில இந்தியதொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை  எடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலைஅறிவியல் பட்டப் படிப்புக் களுக்கு, இறுதிப்பருவத் தேர்வு தவிர, மற்ற பருவத்தேர்வுகள் ரத்து செய்யப் படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப் பட்டது.இந்த உத்தரவை எதிர்த்துஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு அக்டோபர்  7 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அரசின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் எனசில மாணவர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.இதற்கு நீதிபதிகள், இந்தவிவகாரத்தில் அகில இந்தியதொழில்நுட்பக் கல்விக் குழு கவுன்சிலின் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றும்  வழக்கு தொடரும் மாணவர்களின் மொத்த அரியர் எண்ணிக்கை, பத்தாம் வகுப்பு முதல் அவர்களின் கல்வி விவரங்கள் கேட்கப்படும் என்றும் தெரிவித்தனர்.ஜொமோட்டோ உள்ளிட்ட ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் இன்ஜினியரிங் படித்தவர்களே பணியாற்றுகின்றனர். தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கின் விசாரணையை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.