tamilnadu

img

இந்நாள் செப். 30 இதற்கு முன்னால்

1980 - கணினி வலையமைப்பில் (கம்ப்யூட்டர் நெட்வொர்க்) மிகப்பெரும் பங்காற்றும் அமைப்பான ஈதர்நெட் தொழில்நுட்பத்தின் முதல் சீர்தரங்கள்(ஸ்டாண்டர்ட்ஸ்) வெளியிடப்பட்டன. ஈதர்நெட் உண்மையில், ஜெராக்ஸ் நிறுவனத்தின் பிஏஆர்சி ஆய்வகத்தில் 1973-74 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஜெராக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஏராளமான முன்னேற்றங்கள்பற்றிய குறிப்பு இத்தொடரில் 2019 ஏப்ரல் 19இல் இடம்பெற்றுள்ளது. 1960களின் இறுதியில் உருவான அலோஹாநெட் என்ற தொழில்நுட்பத்தை முன்னோடியாகக்கொண்டு உருவான ஈதர்நெட் தொழில்நுட்பத்தை, ராபர்ட் மெட்கால்ஃப் தனது முனைவர் பட்டத்துக்கான ஆய்வின் ஒரு பகுதியாக முன்மொழிந்திருந்தார்.

பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் ஊடகம் என்று முற்காலத்தில் நம்பப்பட்ட லுமினிஃபெரஸ் ஈதர் என்பதை அடிப்படையாகக்கொண்டே ஈதர்நெட் என்ற பெயரை அவர் சூட்டினார். வெற்றிடத்தில் ஒளி பயணிக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், பிரபஞ்சமெங்கும் ஓர் ஊடகம் பரவியிருக்கவேண்டும் என்று நம்பப்பட்டது. அதனை ஈதர் என்று அழைத்தனர். இந்த நிலையான லுமினிஃபெரஸ் ஈதர்(அல்லது ஈதர் காற்று!) ஊடகத்திற்கும், புவிக்குமான சார்பு இயக்கத்தைக் கண்டறிவதற்காக, 1887இல் ஆல்பர்ட் மைக்கேல்சன், எட்வர்ட் மார்லி ஆகியோர், ஒஹையோவின் க்ளீவ்லாந்தில் தற்போதைய கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வினை மேற்கொண்டனர். இதன் முடிவுகள் எதிர்மறையாக வந்ததே, ஈதர் என்றொரு ஊடகமே இல்லை என்பது வெளிப்படக் காரணமாக அமைந்தது. இந்த ஆய்வு ‘மிகப் புகழ்பெற்ற தோற்றுப்போன ஆய்வு’ என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சிறப்புச் சார்புக் கோட்பாடு உருவாகக் காரணமாக அமைந்தன.

மைக்கேல்சன்-மார்லி ஆய்வு என்றழைக்கப்படும் இந்த ஆய்வு இல்லையென்றால், சிறப்புச் சார்புக்கோட்பாடே உருவாகியிருக்காது என்று ஐன்ஸ்டீன் குறிப்பிட்டிருக்கிறார். ஈதர்நெட் என்பது மாய ஊடகம் என்றாகிவிட்டாலும்கூட, அதைப் போன்று, எங்கும் பரவி இணைக்கக்கூடியது என்பதற்காகவே மெட்கால்ஃப் இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார். 1979இல் மெட்கால்ஃப் ஜெராக்ஸ் நிறுவனத்தைவிட்டு வெளியேறிவிட்டாலும், ஈதர்நெட் என்பது அந்நிறுவனத்தின் வணிகச் சின்னமாக(ட்ரேட் மார்க்) பதிவு செய்யப்பட்டிருந்தது. மெட்கால்ஃபின் வேண்டுகோளுக்கிணங்கி அந்த உரிமையை விட்டுக்கொடுத்த ஜெராக்ஸ் நிறுவனம், இண்ட்டெல், டிஇசி(டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேஷன்) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ஈதர்நெட்டை மேம்படுத்திப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது. இன்றைய நெட்வொர்க்குகளில் முக்கியப் பங்காற்றும் ஈதர்நெட்டே, பெரும்பாலும் இணையத்தை இணைப்பதாக உள்ளதால், இணையத்திற்கான மிகமுக்கியத் தொழில்நுட்பங்களில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.

அறிவுக்கடல்