1888 - சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த், பொற்கோவிலில் முதல் தடவையாக வைக்கப்பட்டது. சீக்கிய மதம் 15ஆம் நூற்றாண்டில் குரு நானக் தேவ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. அவரும், அவருக்குப்பின் வந்த ஒன்பது குருக்களுமாக மொத்தம் 10 குருக்களால் சீக்கிய மதம் வழிநடத்தப்பட்டு, பத்தாவது குருவால் அவருக்குப்பின், மனித குருக்கள் இன்றி, தற்போதைய புனித நூலான குரு கிரந்த சாஹிப் குருவாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் ஐந்து குருக்களான குரு நானக் தேவ், குரு அங்காட் தேவ், குரு அமர்தாஸ், குரு ராம் தாஸ், குரு அர்ஜுன் தேவ் ஆகியோருடன், ரவிதாஸ், ராமானந்தா, கபீர் முதலான இந்து அறிஞர்கள், ஷேக் ஃப்ரீத் என்ற இஸ்லாமிய சூஃபி கவிஞர் ஆகியோரின் போதனைகள் (பாடல்கள்), ஐந்தாம் குருவான குரு அர்ஜுன் தேவால் தொகுக்கப் பட்டதே ஆதி கிரந்த். 1581இல் தொடங்கி, 1589இல் கட்டி முடிக்கப்பட்ட பொற்கோவில் என்றழைக்கப்படும், ஹர்மந்தர் சாகிப் என்ற உண்மையான பெயருடைய சீக்கிய ஆலயத்தில் 1604இல் ஆதி கிரந்த் நிறுவப்பட்டது.
ஆறாவது, ஒன்பதாவது, பத்தாவது குருக்களான குரு ஹர்கோவிந்த், குரு தேக் பகதூர், குரு கோவிந்த் சிங் ஆகியோரின் போதனைகள் சேர்க்கப்பட்டு, தற்போதைய குரு கிரந்த சாஹிப் என்ற நூலாக பத்தாவது குருவால் இறுதி செய்யப்பட்டது. இதுவே எல்லா குருத்வாராக்களிலும் வைக்கப்பட்டுள்ளது. ஏழாவது, எட்டாவது குருக்களான, குரு ஹர் ராய், குரு ஹர் கிஷன் ஆகியோர் தங்கள் போதனைகளாக எதனையும் சேர்க்கவில்லை. மாணவர் என்பதற்கான வடமொழிச் சொல்லான சிஷ்யா என்பதிலிருந்து, கற்றல் என்ற பொருளுடன் உருவான சிக்கானா, சிக்கி என்ற பஞ்சாபி மொழிச் சொற்களிலிருந்து சீக்கியம் என்ற சொல் உருவானது. அதாவது வாழும் முறையினைப் போதிப்பதாக சீக்கிய மதமும், கற்பவர்களாக சீக்கியர்களும் இருப்பதே அம்மதத்தின் அடிப்படைத் தத்துவமாக உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தற்போது உலகின் ஒன்பதாவது பெரிய மதமாக சீக்கியம் விளங்குகிறது. போதனைகளைத் தொகுக்க இரண்டாவது குருவான குரு அங்காட் தேவால் உருவாக்கப்பட்ட குர்முகி எழுத்து வடிவமே தற்போது பஞ்சாப் அரசில், பஞ்சாபி மொழிக்கான அதிகாரப்பூர்வ எழுத்துவடிவமாக உள்ளது.