சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹுபேய் மாகாணம் உகான் நகரில் முதல் முதலாக பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் இதுவரை, கரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 42,638 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலை கண்டறியும் உபகரணங்கள், சீனாவில் பற்றாக்குறையாக உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, சீன அரசு அறிவித்துள்ளதை விட அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பை சேர்ந்த நிபுணர் குழு, சீனாவிற்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்து தடையை சீன அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து கனடா நாட்டை சேர்ந்த மருத்துவர் புருஸ் அய்ல்வர்ட் தலைமையிலான நிபுணர் குழு சீனா விரைகிறது. மேலும், சீன அதிபர் ஜிங்பிங் திடீரென்று மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.