சென்னை,மார்ச் 2- குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தொடர் போராட் டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அனுமதியின்றிப் போராட்டம் நடத்துவோர் மீது காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை ஏன் காத்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினர். இது குறித்துப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கும், காவல்துறை தலைமை இயக்குநருக்கும் உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.