tamilnadu

img

சேவ் என்டிசி இயக்கம்: என்டிசி பஞ்சாலை தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

கோவை, அக். 18  என்டிசி பஞ்சாலைகளை பாதுகாக்கும் தொடர் இயக்கம் நடத்தும் வகையில் சேவ் என்டிசி இயக்கத்தை துவக்குவது என அங்கிகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து இக்கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.பத்மநாபன் கூறுகையில், ஒன்றிய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள்  உள்ளது. தமிழகத்தில் 7 பஞ்சாலைகள் இயங்கி வருகின்றது. இதில் கோவையில் மட்டும் ஐந்து பஞ்சாலைகள் செயல்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று முதல் அலையில் மார்ச் மாதம் என்டிசி பஞ்சாலைகள் மூடப்பட்டது. 

இரண்டு வருடங்கள் கழிந்த பின்னும் என்டிசி பஞ்சாலைகள்  திறக்கப்படவில்லை. என்டிசி நிர்வாகம் அதிகாரிகளுக்கு முழு சம்பளத்தை கொடுத்துவிட்டு தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே தரப்படுகிறது. பஞ்சாலைகளை அனைத்தையும்  முழுமையாக இயக்கி வேலை வழங்க வேண்டும். முழு ஊதியம்  தொழிலாளர்களுக்கு  வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால் ஒன்றிய அரசு இதர பொதுத்துறை நிறுவனங்களை சிறிது சிறிதாக விற்பதை போல கொரோனா தொற்றால் மூடப்பட்ட நிலையில் என்டிசி ஆலைகளையும் அதன் சொத்துகளையும் விற்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதற்கேற்றாற்போல் தொடர்ந்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் என்டிசி ஆலைகளை பாதுகாப்போம் என்கிற கோரிக்கை முழக்கத்தோடு என்டிசி பஞ்சாலைகளின் அங்கிகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் கோவை கேரளா கிளப்பில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதுபோக மஹாராஷ்ட்டிரா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காணொளி மூலம் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தின் என்டிசி ஆலைகள் செயல்படும் மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்குவது.
இதற்கு சேவ் என்டிசி என்று பெயரிடுவது. இதன் ஒருங்கிணைப்பாளராக சி.பத்மநாபன், தலைவராக சச்சின் அகிர் (மராட்டியம்) கே.என்.கோபிநாத் உதவி தலைவர் மற்றும் பி.ஆர்.நடராஜன், எம்.சண்முகம், இளமறம் கரீம் மற்றும் மராட்டியம், குஜராத், ஆந்திரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து ஒருங்கிணைப்பு குழுவை செயல்படுத்துவது. இதன் முதல் கட்டமாக மத்திய அரசு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற வாயிலில் போராட்டத்தில் ஈடுபடுவது. ஒன்றிய தலைமை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து என்டிசி ஆலைகளை இயக்க தேவையான அழுத்தத்தை ஏற்படுத்துவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. முன்னதாக இந்த கூட்டத்தில் எல்பிஎப் பஞ்சாலை சங்க தலைவர் பார்த்தசாரதி, நாகேந்திரன், பாண்டியன், சிஐடியு மில் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சி.பத்மநாபன் மற்றும் நிர்வாகிகள் பிரன்சிஸ் சேவியர், ராஜேந்திரன் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் 26 பேர் பங்கேற்றனர்.

;