tamilnadu

img

கோவை, நீலகிரி, தேனி, குமரியில் தொடர் கனமழை

கோயம்புத்தூர்:
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 91 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 

கோவை
கோவை மாவட்டத்தில் கனமழைபெய்து வருவதால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. உக்கடம் அடுத்த ஆத்துப்பாலம் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகளை தாண்டி வெள்ள நீர் செல்கிறது.வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் நீரில் மூழ்கியது.பாலத்திற்கு மேலே பல அடி தூரத்திற்கு தண்ணீர் செல்கிறது. அந்தசாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல ஒண்டிபுதூர் - பட்டணம் சாலையில் உள்ள தரைப்பாலமும் நீரில் மூழ்கியுள்ளதால், இரண்டாவது நாளாக அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூலூர் அடுத்தராவத்தூரில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பொதுமக்கள் பயன்பாட்டுக்கான தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மாதம்பட்டி பாலம் மற்றும் குனியமுத்தூர் அணைக்கட்டு பகுதியில் மழை நீர் நிரம்பி செல்வதை மாவட்ட ஆட்சியர் இராசாமணி நேரில் ஆய்வு செய்தார்.

நீலகிரி
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர், பந்தலூர், குந்தா கோத்தகிரி ஆகிய 6 தாலுக்காவில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. உதகையில் ஷேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.கூடலூர் மாயாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரகுடிசைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.அவலாஞ்சியில் அதிகபட்சமாக 911 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், ஊருக்குள் செல்லும் பிரதானசாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உதகையிலிருந்து அவலாஞ்சி சென்ற அரசுப் பேருந்து திரும்பி வரமுடியாமல் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவலாஞ்சி மக்கள் கூறுகின்றனர்.

தேனி
தேனி மாவட்டம் அல்லிநகரம், அன்னஞ்சி, பெரியகுளம், உத்தமபாளையம், போடி, ஆண்டிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது.

கரூர்
கரூர் மாவட்டத்தில் கரூர் நகரம், வேலாயுதம்பாளையம், நொய்யல், பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் விடியவிடிய லேசான சாரல் மழை பெய்தது.கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்துகுளுமையான வானிலை நிலவி வருகிறது. மழையினால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.குமரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.

அமைச்சர் ஆய்வு
இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கனமழையால் ஏற்பட்ட இழப்புகள் கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் அனைத்து தரப்பினருக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும்அவர் தெரிவித்தார். மேலும் உயிரிழப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

நிரம்பும் அணைகள்
இதனிடையே கனமழை காரணமாகமுக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள பில்லூர் அணைக்கு 36 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் கொள்ளளவான 100 அடியில் தற்போது 97 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதி
கரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து தற்போது 123.20 அடியாக உள்ளது. அந்த அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 318 கனஅடியாக இருந்த நிலையில் வெள்ளியன்று காலை 16 ஆயிரத்து 321 கனஅடியாக அதிகரித்துள்ளது.இதனால் அணையின் நீர் இருப்புஆயிரத்து 907 மில்லியன் கனஅடியிலிருந்து 3 ஆயிரத்து 262 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் அது 1100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதே போல் வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 31.92 அடியாக உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து 411 கன அடியாக உள்ளது.அணையிலிருந்து குடிநீருக்காக விநாடிக்கு 60 கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், அணையின் நீர் இருப்பு 411 மில்லியன் கன அடியாக உள்ளது. 57 அடி மொத்த கொள்ளளவு கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.10 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76.58 அடியாக உள்ளது. பெரியாறு பகுதியில் 200.6 மில்லி மீட்டர்,தேக்கடி 235 மில்லி மீட்டர், கூடலூர் பகுதியில் 53 மில்லி மீட்டர், உத்தமபாளையம் 57.1 மில்லி மீட்டர், வீரபாண்டி 61.0 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.