திருப்பூர், ஜூன் 3 –திருப்பூரில் பொது மக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், அங்கு கடை திறக்கப்படாது என்றும், வேறு இடத்துக்கு மாற்றுவதாகவும் ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி உறுதியளித்தார்.திருப்பூர் அனுப்பர்பாளையம் கலைவாணி தியேட்டர் சாலையில் நேதாஜி நகர், கவிதா லட்சுமி நகர், முத்து கோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதில் கூறப்பட்டிருப்பதாவது: ஏவிபி சாலை, கலைவாணி தியேட்டர் அருகில் வாரச் சந்தை, பேருந்து நிறுத்தம், பள்ளிக்கூடம், தொழிற்சாலைகள் நெருக்கமான குடியிருப்புகள் உள்ளன. மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு இப்பகுதியின் டாஸ்மாக் கடை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய 23 பேரின் மரணம் நிகழ்ந்தது. இந்நிலையில், இப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக புதிய டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சி தொடர்ந்து வருகிறது. குறிப்பாகஎட்டு மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்க முயற்சித்தபோது 200க்கும் மேற்பட்டமக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அப்போது, இனிமேல் இப்பகுதியில் டாஸ்மாக் கடைதிறக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 30ஆம் தேதி மாலை மீண்டும் இங்கு டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடந்துள்ளது. இத்தகவல் தெரிந்தவுடன் அனைத்து கட்சியினர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் டாஸ்மாக் அதிகாரிகளிடம் கடை திறக்க எதிர்ப்புத் தெரிவித்து மனுக் கொடுத்தனர்.எனவே பொது மக்களின் எதிர்ப்பு உணர்வுகளை மதித்து டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும், வேறு இடத்தில்அப்பகுதிக்குரிய கடை திறக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.