tamilnadu

திருப்பூர் மாவட்ட செய்திகள்

சீரான குடிநீர் விநியோகம் கோரி திருப்பூரில் மக்கள் மறியல்


திருப்பூர், ஏப். 6 –திருப்பூர் வீரபாண்டி அருகே கல்லாங்காடு பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லாங்காடு பகுதியில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட இப்பகுதி குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி நான்கு சாலை சந்திப்பில் வெள்ளியன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குடிநீருக்காக அனைவரும் தொலை தூரங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. பகல் நேரங்களில் வேலைக்கு செல்வதால், வேலைக்கு சென்று விட்டு திரும்பி தண்ணீர் எடுக்க மறுபடியும் அலையும் நிலையால் வேதனையாக உள்ளது. எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சீரான குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டோர் கூறினர். இந்த மறியல் பற்றி தகவலறிந்து வீரபாண்டி காவலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவுக்குள் குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




ஆசிரியையிடம் நகை பறிப்பு


திருப்பூர், ஏப்.6-திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் செம்மண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மனோன்மணி (73). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் சனியன்று காலை 9.30 மணிக்கு அதே பகுதியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார். பின் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் வந்தனர். அவர்கள்மனோன்மணி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து மனோன்மணி வெள்ளகோவில் காவல்துறையிடம் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற 2 இளைஞர்களை தேடி வருகின்றனர்.

;