தருமபுரி, ஜூலை 7- விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்காக பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய தருமபுரியில் வருகிற ஜூலை 9 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரி வித்துள்ளர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதமரின் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போது 5 ஏக்கருக்கும் அதிகமாக உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில், பயன்பெற ஏதுவாக 2019, பிப்.1-க்கு முன்பு பட்டாவில் பெயர் உள்ள ஒரு நபர் இறந்திருப்பின் அவர்களது வாரிசுகளுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்துதர வருகிற ஜூலை 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் இறந்தவரின் இறப்புச் சான்று, வாரிசு சான்று, நில விவரங்கள் (சிட்டா), ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர்.