திருப்பூர், மே 14 -திருப்பூரில் டிரான்ஸ்பார்மரில் தேர்தல் விதிமுறைக்கு மாறாக வைக்கப்பட்டுள்ள பிரதமர், முதல்வர்படங்கள் பொறித்த விளம்பரங்களை அகற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிசாமியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மின் வாரிய தொமுச சார்பில் செவ்வாயன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரியம் சார்பில் சிறியதாக ஒரே மின் கம்பத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டது. அந்த டிரான்ஸ்பார்மரில் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர், முதல்வர், படங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர் இருக்கும் இடம் பெயர் எண்கள் உள்ளிட்ட விபரங்கள் பொறிக்கப்பட்டு அரசு விளம்பர போர்டு வைக்கப்பட்டது.தற்போது தேர்தல் விதிமுறைகள் மே 27 ம் தேதி வரை அமலில் உள்ளதால் எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவர்கள் படங்கள் பொதுஇடங்களில், பொதுப்பார்வைக்கு இருக்க கூடாது. ஆனால் திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் அரசியல் தலைவர்கள் படங்கள் பொறித்த விளம்பர போர்டுகள் உள்ளன. புகாரைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டிரான்பார்மரிலுள்ள பிரதமர், முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன. ஆனால் திருப்பூர் ஆர் கே நகர் பிரிவு மின்வாரிய பாரதிநகர் பெட்ரோல் பங்க் அருகில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து அதில் விதிகளை மீறி பிரதமர் முதல்வர் புகைப்படங்கள் பொறித்த போர்டு வைத்துள்ளார். இது முற்றிலும் விதிமீறல் ஆகும்.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
இதே அலுவலகத்திற்கு உட்பட்ட பிச்சம்பாளையம் அரசு பள்ளி மேற்கு ஸ்ரீநகர் செல்லும் சாலையிலுள்ள மின்சார கம்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகனம் மோதி முறிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதே போல் போயம்பாளையம் பேருந்து நிறுத்தம் தெற்கு பெட்ரோல் பங்க் பகுதியிலுள்ள உயரழுத்த 40 அடி இரும்பு மின்சார கம்பம் கடந்த சில மாதங்களுக்கு வாகனம் மோதி சேதமடைந்தது. அப்போது அதை சீரமைக்க வாகன உரிமையாளரிடம் இருந்து பணம் வசூல் செய்தனர். ஆனால் பழுதடைந்த மின்சார கம்பம் மாற்றப்படவில்லை. இந்த நிலையில் அதே கம்பத்தில் மீண்டும் வாகனம் மோதி தற்போது மிகவும் சேதமடைந்துள்ளது. எந்நேரமும் உடைந்து சாலையில் விழுந்து பெரும் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. இது குறித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே உடனடியாக இது குறித்து உரிய விசாரணை நடத்தி தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறியும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மின்வாரிய அலுவலர்கள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகனம் மோதி மிகவும் சேதமடைந்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையிலுள்ள மின்சார கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமியிடம் முறையிடப்பட்டுள்ளது.