திருப்பூர், ஜூன் 2 -திருப்பூர் மாநகரில் பல நாட்களாக அப்புறப்படுத்தாமல் பல்வேறு இடங்களில் மலை போல் தேங்கியிருக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.திருப்பூர் நகரில் கடந்த சில நாட்களாக குப்பைகள் சீராக அகற்றப்படாமல் சாலையோரங்களில், குடியிருப்புப் பகுதிகளில் மலை போல் தேங்கி இருக்கிறது. இதனால் ஈக்கள், பூச்சிகள் தொல்லை குடியிருப்புப் பகுதிகளில் அதிகரிப்பதுடன், துர்நாற்றமும் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு காரணமாக குழந்தைகள், முதியோர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தல் உள்ளது.குறிப்பாக கல்வி ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் பொது இடங்களில் இது போல் பெருமளவு குப்பைகள் தேங்கியிருப்பது குழந்தைகள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. எனினும் மாநகராட்சி நிர்வாகம் குப்பை அகற்றும் பிரச்சனையில் மெத்தனமாக உள்ளது. ஏற்கெனவே சமீப நாட்களாக காய்ச்சல், நோய்த் தாக்குதல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பருவ நிலை மாறும் சூழலில் நோய்த் தாக்குதல் மேலும் தீவிரமாகும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் குப்பை அகற்றம், சாக்கடை தூர்வாருவது, சுகாதாரப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டிய உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிக் கிடப்பதுயை பொது மக்களிடம் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.இனியும் காலதாமதம் செய்யாமல் குடியிருப்பு, சாலையோரங்கள், வீதிகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதுடன், மருந்து தெளித்து சுகாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.