tamilnadu

அட்டைக் கிடங்கில் தீ விபத்து

திருப்பூர், மே 15-விருதுநகர் மாவட்டம், சாத்துரைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (42). இவர், திருப்பூர் எஸ்.வி.காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான பழைய அட்டை கிடங்கு, லட்சுமி நகர் பகுதியில் உள்ளது. திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட கோன் அட்டைகளை மொத்தமாக வாங்கி வந்து தரம் பிரித்து விற்பனை செய்து வந்தார். இந்தக் கிடங்கில் ஊழியர்கள் சிலர் தங்கியிருந்து வேலை செய்து வந்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் பணிமுடிந்து கிடங்கைப் பூட்டி விட்டுச் சென்றனர். இதனிடையே செவ்வாயன்று அதிகாலை 2 மணி அளவில் கிடங்கில் இருந்து புகை வருவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து ஊழியர்கள் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்குவந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் எளிதில் தீ பிடிக்கும் வகையில் செயல்பட்டு வரும் பழைய அட்டை கிடங்குகளை உடனடியாக அகற்றும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

;