tamilnadu

img

மல்லசமுத்திரம் அருகே அருந்ததிய மக்கள் மீது சாதிய ஆதிக்க சக்தியினர் தாக்குதல்

நாமக்கல், மே 27-மல்லசமுத்திரம் ஒன்றியம், கொளங்கொன்டை ஈச்சங்காட்டில் தலித் அருந்ததிய மக்களை சாதிய வன்மத்துடன் தாக்கிய  சாதிய ஆதிக்க சக்தியினர்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம்  கொளங்கொண்டை ஈச்சங்காட்டில் 80க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் உள்ளன. இவர்கள் விவசாய கூலிவேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் மழை மற்றும் காற்று பலமாக வீசியதன்  காரணமாக அருந்ததியர் தெருவுக்குள் இருந்த  மின்சார கம்பங்கள் சாய்ந்து விட்டன. இதனால் பெரும்சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக, இப்பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் சூழ்நிலையில் மின்சாரம் இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து மல்லசமுத்திரத்திலுள்ள  மின்சாரவாரிய அலுவலக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து சாய்ந்து போனமின்சார கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மின்சார கம்பத்திற்கான லைன்  செல்லும் வழியில்சீமை கருவேல மரங்கள் அதிகமாகஇருந்ததால் அதனை அகற்றினால்தான் உடனடியாக மின்சாரம் இப்பகுதிக்கு வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், தங்களிடம் போதுமான ஆட்கள் இல்லாத நிலையில் ஊரில் உள்ளவர்கள் இதனை அகற்றுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, இப்பகுதியைசேர்ந்த அப்புமூர்த்தி மற்றும் அருகில் வசிப்பவர்கள் சிலர் சேர்ந்து அருகிலுள்ள புறம்போக்கு நிலத்தில் உள்ள  கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்நிலத்தின் அருகேயுள்ள விவசாய தோட்டத்தை சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த முத்துவேல் மற்றும் அவரது மனைவி ராதா, மகன்கள் பிரபாகரன், செல்வகுமார் ஆகியோர் தங்களது நிலத்தின் அருகேயுள்ள மரங்களை வெட்டக்கூடாதுஎன்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த  அப்புமூர்த்தி, இராஜம்மாள் மற்றும்ரம்யா ஆகியோரை சாதியைகுறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் இழிவாக பேசியதுடன், தீடீரென தாக்க துவங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் கல்லூரி மாணவி ரம்யா படுகாயமடைந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மல்லசமுத்திரம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தும், தற்போதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல்துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கும், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் பலமுறை நேரில் சென்று வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் திங்களன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் பாதிக்கப்பட்ட அப்புமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் ஒன்றிய குழு உறுப்பினர் சி.சுந்தரம் ஆகியோர் தலைமையில் ஊர்பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். இதில் சாதியை இழிவாககூறிப்பிட்டு, சாதிய வன்மத்துடன்தாக்குதல் நடத்திய நபர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.