திருவனந்தபுரம்:
எல்டிஎப் அரசின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளுக்கு எதிராக இடைத்தேர்தலில் கூற ஏதும் இல்லாததால் மதரீதியான பிரிவினையை ஏற்படுத்த யுடிஎப் முயன்று வருகிறது என சிபிஎம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறினார்.
திருவனந்தபுரத்தில் நடந்த மீட் தி பிரஸ் நிகழ்ச்சியில் சனியன்று பங்கேற்ற கொடியேரி பாலகிருஷ்ணன் கூறியதாவது:
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பகுதியை நிறைவேற்றிய அரசுதான் இப்போதுஅதிகாரத்தில் உள்ளது. சொல்வதை செய்யும் அரசாக எல்டிஎப் அரசு உள்ளது.தேர்தல் அறிக்கையில் மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மதரீதியான பிரிவினையின் மூலமாக ஓட்டுகளைப் பெற யுடிஎப் முயற்சிக்கிறது. வட்டியூர்காவில் சாதியைச் சொல்லி யுடிஎப் வேட்பாளர் ஓட்டு கேட்கிறார். இங்கு என்எஸ்எஸ் சாதி உணர்வை தூண்டுகிறது. தேர்தலில் எல்டிஎப், யுடிஎப் அரசுகளையும் மத்திய அரசையும் ஒப்பிட்டுபார்க்க வேண்டும். தேர்தலை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம். ஐந்து தொகுதிகளிலும் பாலாவில் கிடைத்ததுபோல் வெற்றிபெறுவோம். என்எஸ்எஸ் அரசியல் நிலைபாட்டை எடுத்தால் அதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அப்படியானால் முந்தைய காலங்களைப் போலவே அரசியல் கட்சியை துவக்க தயாராக வேண்டும். என்எஸ்எஸ் அமைப்பை தோற்றுவித்த மந்நத்து பத்மநாபன் அரசியல் கட்சியை உருவாக்கவில்லை. அவரது மறைவுக்குப் பிறகே என்டிபி என்கிற பெயரில் அரசியல் கட்சிஉருவாக்கியதும், தேர்தலில் போட்டியிட்டதும் எல்லாம் நடந்தது.இன்னமும் கூட அரசியல் கட்சி துவங்கி நேரடியாக அரசியலில் தலையிடலாம். தற்போது அனைத்துக் கட்சியினரையும் கொண்டுள்ள அமைப்பாகும் என்எஸ்எஸ். அங்கு முன்னாள் காங்கிரஸ் ஊழியரான சுகுமாரன் நாயரின்தனிப்பட்ட அரசியல் நோக்கம் திணிக்கப்படுகிறது. தனது நோக்கத்தின் அடிப்படையில் அல்ல அமைப்பில்செயல்படுவது என்று கொடியேரி சுட்டிக்காட்டினார்.