tamilnadu

img

தெருவாசிகள் உண்ணவும் உறங்கவும் ஏற்பாடு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள முதல்வர் உத்தரவு

திருவனந்தபுரம், மார்ச் 25- ஒவ்வொரு பகுதியிலும் வீடுகள் இல்லாமல் தெருக்களில் வசிப்போர் ஏராளமானோர் உள்ளதாகவும், அத்தகைய நபர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்க உள்ளாட்சி அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  பஞ்சாயத்து தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தலையிட்டு வார்டுகளின் அன்றாட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். கடை அடைப்பால் சிரமப்படும் குடும்பங்கள் அனைத்து வார்டுகளிலும் இருக்கக்கூடும். அன்றாட வருவாயில் வாழும் குடும்பங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு உதவி தேவை. இவ்வாறு அன்றாடங் காய்ச்சிகளாகவும், ஓரங்கட்டப்பட்ட நிலையிலும் உள்ள குடும்பங்கள், வீடுகள் பற்றிய விவரங்களை வார்டு அளவிலான குழுக்கள் சேகரிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

 வட்டார அளவில் கடைகளில் உணவுப்பொருட்கள் உள்ளனவா என்பதை வியாபாரிகளோடு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துமாறு காசர்கோடு சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தனிமை வார்டுகளில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு வழங்குவது மட்டுமல்ல, மன அழுத்தம் உள்ளவர்களை ஆற்றுப்படுத்தவும் (கவுன்சிலிங்) உதவ வேண்டும். இதற்கு எம்எல்ஏக்கள் பொறுப்பேற்க வேண்டும். அதோடு தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதுவும் எம்எல்ஏக்களின் பொறுப்பாகும். வட்டார அளவில் மனிதர்கள் தனிமையை மேற்கொள்ள பொருத்தமான இடங்களையும் எம்எல்ஏக்கள் கண்டறிய வேண்டும். இது ஒரு கொள்ளைநோய், இதைத் தடுக்க முயற்சிப்பவர்களை குறைந்தபட்சம் ஒரு கணம் நினைவில் கொள்ள வேண்டும்.

தனிமை வார்டில் சிறப்பு உடையணிந்து, நோயுற்றவர்களை கவனித்து, கண்காணிப்பில் இருக்கும் செவிலியர்கள் குழுவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கூடுதலாக, மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் சுகாதார ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள், கண்காணிப்பில் உள்ளவர்களை பின்தொடரும் ஆஷா தொழிலாளர்கள் ஆகியோரை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுள்ள அவர்களது செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது. நாம் அவர்களுக்குக் காட்டும் சிறிதளவு அலட்சியம்கூட ஒரு பெரிய பாதிப்பாக மாறும். சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பில் இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. சொந்த குடும்பத்தைக்கூட மறந்து நாட்டுக்காக பாடுபடும் இவர்கள் மீது சுகாதாரத்துறை தனிக் கவனம் செலுத்த வேண்டும்.  

இன்று அச்சு- காட்சி ஊடகங்களின் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டது. கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணை அளிப்பதாக அவர்களும் உறுதியளித்தனர். அச்சுக்காகிதம் போன்றவற்றை கொண்டு வர மாநில எல்லைகளில் தடை ஏற்படுவதாக அச்சு ஊடகத்தினர் தெரிவித்தனர். இதில் தலையிட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோரை சிறு குழுக்களாக புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடும்ப சுகாதார மையங்களிலும் ஆரம்ப சுகாதார மையங்களிலும் பணியாற்றுவோர் அந்தந்த நிறுவனங்களுக்கு அருகிலேயே வசிக்க ஏற்பாடு செய்யப்படும். அவர்கள் பணிக்கு வந்து செல்ல உள்ளாட்சி அமைப்புகளின் வாகனங்கள் பயன்படுத்தப்படும். மருத்துவமனைகளில் உள்ளவர்களை கவனிக்க பார்வையாளர்கள் இல்லாத நிலை ஏற்பட்டால் சுகாதார செயற்பாட்டாளர்களிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்படும். இப்போது அதிகரித்துவரும் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற இளையோர் முன்வர வேண்டும். பார்வையாளர் உட்பட பல்வேறு பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். காயமின்றி இந்த கட்டத்தை கடக்க முயற்சிக்கிறோம். அதற்கு இளைஞர்களின் உத்வேகமும் கடின உழைப்பும் தேவை. இளைஞர்கள் முன்னிலையில் நிற்க வேண்டிய கட்டமாகும் இது.  

 மாநிலத்தின் பல்வேறு எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் பல மாநிலங்களிலும் சிக்கி அவதிப்படுகிறார்கள். நவோதயா பள்ளிகள் போன்ற நிறுவனங்களில் ஒரு பள்ளியிலிருந்து மற்றொரு பள்ளிக்கு மாணவர்களை அனுப்பும் வழக்கம் உள்ளது. அதன்படி உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்ற நமது குழந்தைகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.  

கர்நாடகத்தின் பல பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் தற்போது வயநாட்டில் சிக்கியுள்ள குழந்தைகளை திருப்பி அழைத்துவர அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துவர சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கேரள அரசு விவாதிக்கும். வெளி மாநிலங்களிலிருந்து வருவோர் 14 நாட்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றார்.

;