tamilnadu

img

காலிப் பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நிரப்புக!

பெரம்பலூர், ஜூன் 22- மின் ஊழியர் மத்திய அமைப்பு பெரம்பலூரில் வட்டக் கிளையின் 11-வது வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு வட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். வட்ட இணைச் செயலாளர் ராஜகுமாரன் கொடியேற்றினார்.  சிஐடியு மாவட்டச் செயலாளர் அழகர்சாமி மாநாட்டை தொடங்கி வைத்தார். வட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் அறிக்கை வாசித்தார். வட்டப் பொருளாளர் தமிழ்செல்வன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் காங்கேயன், மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன், திருச்சி மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் வட்ட துணைத் தலைவர் ஆல்பர்ட், மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் ராஜகுமாரி உட்பட பலர் பேசினர்.  மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும்.

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டும், ஐடிஐ படித்தவர்களை கொண்டும் நிரப்பிட வேண்டும். பெரம்பலூர் கோட்டத்தை பெரம்பலூர், பெரம்பலூர் கிராமியம் என இரு கோட்டங்களாக பிரித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.  ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை துவக்கிட வேண்டும், 1.12.2019 முதல் வழங்கவேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை மின்வாரியம் உடனடியாக துவங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். தண்ணீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளை பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்றார். முடிவில் கோட்ட இணைச் செயலாளர் குமாரசாமி நன்றி கூறினார்.