ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் தெற்கு ஆசிய நாடுகள் ஆகும். இந்த 8 நாடுகளை சார்க் அமைப்பு நாடுகள் எனவும் அழைப்பார்கள். ஆனால் சார்க் அமைப்பில் உள்ள ஆப்கானிஸ்தான் நீங்கலாக (இந்த முறை மட்டும் பங்கேற்கவில்லை - அது பெரிய கதை) மற்ற 7 நாடுகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் தொடரைப் போன்று தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் விளையாட்டுத் திருவிழா நடத்தப்படும். இந்த தொடரின் 13-வது சீசன் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 26 விளையாட்டுகள் கொண்ட இந்த தொடரில் தெற்காசியப் பகுதியில் மிகப்பெரிய நாடான இந்தியா பதக்க பட்டியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. 9-வது நாளில் (மாலை நேரம் வரை) இந்தியா 134 தங்கம், 79 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 254 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. போட்டியை நடத்திய நேபாளம் (168 பதக்கங்கள்) 2-வது இடத்திலும், இலங்கை (200 பதக்கங்கள்) 3-வது இடத்திலும் உள்ளது. தெற்காசியப் பகுதியின் 2-வது பெரிய நாடான பாகிஸ்தான் 119 பதக்கங்களுடன் 4-வது இடத்திலிருந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த 9 நாட்களாக இந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளால் காத்மாண்டு நகரம் திருவிழா போல களை கட்டிய நிலையில், செவ்வாயுடன் இந்த விளையாட்டுத் தொடர் நிறைவு பெறுகிறது.