உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இந்தியா அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியில் பங்குபெறும் அனைத்து அணிகளும் ஒரு ஆட்டத்தை முடித்துவிட்ட நிலையில், சவுதம்டனில் உள்ள ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் இந்திய அணி இன்று தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இது முதல் ஆட்டம் என்பதால் வெற்றியுடன் தொடங்குவது மிகவும் முக்கியமாகும். தொடக்க ஆட்டக்காரர்களான துணை கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நிலைத்து நின்று வலுவான தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையில் தாங்கிப்பிடிக்க கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் காத்திருக்கிறார்கள். இதில் தோனியின் பேட்டிங் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பொதுவாக தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறக்கூடியவர்கள் என்பதால் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை கொண்டு இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மிரட்டுவார்கள். கேதர் ஜாதவ் உடல்தகுதியை எட்டாத பட்சத்தில் அவரது இடத்தில் விஜய் சங்கர் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவர் ஆடுவார்கள்.
தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் ஆட்டத்தில் 104 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும், 2-வது ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும் தோல்வி அடைந்தது. உலக கோப்பை வரலாற்றில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் 2 ஆட்டங்களில் வரிசையாக தோற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணியினர் சரிவில் இருந்து மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயத்தால் உலக கோப்பை தொடரில் இருந்து விலகி விட்டார். தசைப்பிடிப்பால் அவதிப்படும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் நிகிடியும் சில ஆட்டங்களில் விளையாட முடியாத நிலைமையில் இருக்கிறார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் தங்களது வியூகங்களை மாற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பிளிஸ்சிஸ் கூறியுள்ளார். ‘பவுன்சர்’ பந்து தாக்கி காயமடைந்த அம்லா அந்த பாதிப்பில் இருந்து மீண்டு விட்டதால் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.
டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்ற பிறகு தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கில் வெகுவாக பலவீனமடைந்து விட்டது. கேப்டன் பிளிஸ்சிஸ், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ஆகியோரை தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்களின் விக்கெட்களை வீழ்த்தினால், இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.