tamilnadu

குமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை வீடுகளில் மின்னணு பொருட்கள் சேதம்; பேச்சிப்பாறையில் இடி தாக்கி கன்றுக்குட்டி பலி

நாகர்கோவில், செப்.22- குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மாவட்டம் முழுவதும் வானில் கார்மேகங்கள் சூழ்ந்தன. இதனைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் இடிமின்னல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கன மழை பெய்யத் தொடங்கியது.இந்த மழை பெருஞ்சாணி அணையின் நீர் வரத்துப் பகுதியான கீரிப்பாறை மற்றும் சுருளகோடு, தடிக்காரன்கோணம், திட்டுவிளை, பொன்மனை, குலசேகரம், பேச்சிப்பாறை திற்பரப்பு, கடையாலுமூடு உள்ளிட்ட இடங்களில் கன மழையாகப் பெய்தது. பிற்பகல் சுமார் 2 மணிக்குத் தொடங்கிய இந்த மழை 4மணி வரை வரை நீடித்தது. மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்ததால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அருகே சீரோ பாயின்ட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஜெபராஜ் என்பவர் தனது காளைக் கன்றுகுட்டியை மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் மழைக்கு முன்னர் ஏற்பட்ட பலத்த மின்னலின் போது கன்று குட்டியின் மீது மின்னல் பாய்ந்து கன்றுகுட்டி இறந்தது. மேலும் அப்பகுதி வழியாக பறந்து கொண்டிருந்த காகம் ஒன்றும் மின்னல் தாக்கி கன்றுகுட்டி அருகே இறந்து கிடந்தது. மின்னல் காரணமாக குலசேகரம் உள்ளிட்ட இடங்களில் வீடுகளிலுள்ள மின்சாதனங்கள் சேதமடைந்தன.