tamilnadu

img

பானி புயல்: பாதிக்கப்பட்டோருக்கு உதவிட சிபிஎம் வேண்டுகோள்


ஒடிசா மாநிலத்தை மிகவும் கடுமையாகத் தாக்கியுள்ள ஃபானி புயல், உயிர்களுக்கும், உடைமைகளுக்கும், கால்நடைகளுக்கும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி அணியினர் விரைந்துசென்று பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒடிசா மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்கள் அனைத்திலும் மற்றும் வடக்கு ஆந்திராவில் ஒரு சில பகுதிகளிலும் ஃபானி புயல் காரணமாக உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும், உடைமைகளுக்கும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது கண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. இக் கடும் புயல் தற்போது மேற்கு வங்கத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அங்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தக் கூடும்.

இந்த சமயத்தில் மத்திய அரசும், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மாநில அரசுகளும் துரிதமாகச் செயல்பட்டு பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு உரிய நிவாரணத்தையும், பாதுகாப்பையும் அளித்திட வேண்டியது அவசியமாகும். போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு போதுமான வாய்ப்பு வசதிகள் இல்லை என்று சொல்லிவிடக் கூடாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துக் கிளைகளும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்குச் சென்று, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளித்திட வேண்டும் என்றும் அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.