சென்னை,செப்.25- தலைமை நீதிபதி தஹில் ரமணி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமணி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை நீதிபதி தஹில் ரமணி தனது பதவியை கடந்த 6 ஆம் தேதி ராஜினாமா செய்தார். தலைமை நீதிபதி தஹில் ரமணி இடமாற்றத்திற்கு எதிராக வழக்கறிஞர் கற்பகம் சார்பில் கடந்த 18ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி மாற்றம் தொடர்பாக குடியரசுத் தலைவரின் செயலகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதாக வழக்கறிஞர் கற்பகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு புதனன்று(செப்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி தஹில் ரமணி இடமாற்ற பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறிய நீதிபதிகள், தஹில் ரமணியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டு விட்டதால் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.