tamilnadu

தேங்காய் வியாபாரியிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்

ஈரோடு, ஏப்.3- பெருந்துறை அருகே தேங்காய் வியாபாரி ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதனன்று பறிமுதல் செய்தனர்.நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனசுந்தரம், துணை ஆய்வாளர் ஜீவா மற்றும் காவலர்கள் கொண்ட குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுவரை பல்வேறு இடங்களில் கார், வேன், ஆட்டோ உள்பட வாகனங்களில் வந்த நபர்களிடமிருந்து முறையான ஆவணங்கள் இல்லாத பல லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் பெருந்துறை அடுத்த குன்னத்தூர், தாளப்பதி, பாலாஜி நகர் பகுதியில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த வேனில் வந்த கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்த அசார் (22) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவரிடம் ரூ.2 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அதற்கான ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தேங்காய் வியாபாரியான அவர், சாம்ராஜ் நகரில் இருந்து ஊத்துக்குளிக்கு தேங்காய் லோடு கொண்டு சென்று விட்டு அதற்கான பணத்தை வாங்கி கொண்டு ஊருக்கு திரும்புவதாக தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பெருந்துறை வட்டாட்சியர் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டன. 

;