tamilnadu

img

ஆகம மீறல் - வழிபாட்டை ஜனநாயகப்படுத்தும்! - கோனேரிராஜபுரம் சாஸ்திரிகள்

குடமுழுக்கு

ஆகமந்தான் பிரதானம், வழிபாடுங்கறது அடுத்தாப்லேனு சொல்லிண்டு இருக்கற இடத்திலே நடக்கற ஆகம மீறலை பட்டியல்போட்டா இப்பத்திரிகையில் இடம் போறாது.

ஒருவழியாக தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரே நாளில் கும்பாபிஷேகமும்  குடமுழுக்கும் நடைபெற்றிருக்கிறது.  அதன் பொருட்டு பிரஹதீஸ்வரத்தில் குடி கொண்டுள்ள பெருவுடையார் கொடுத்து வைச்சவர்னு சொல்லறதுலே தோஷமில்லை.   சமஸ்கிருதம் தேவ பாஷைனு அதிலேதான் பவர் இருக்குனு சொல்லிண்டு இருக்கறவா, நேத்திக்கு இன்னிக்குனு இல்லே நாளைக்கும் இந்த தமிழ்நாட்டிலே இருந்துண்டுதான் இருப்பா. ஆனா இப்ப சர்கார்லேயும், அவர்களை அனுசரிச்சு தொழில் நடத்தற இதரரும் இதையே சொல்றதுங்கறது வினோதமா இருக்கு. இருந்தாலும்  பெருவுடையாருக்கு கும்பாபிஷேகத்தையும் குடமுழுக்கையும் ஒருசேர நடத்தி வைச்சு ஸகல ஜனங்களையும் ஸந்தோஷப்படுத்திய இவாளுக்கு தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை ஸகிதமாய்  வழக்கம் போல் தொடர்ந்து அருள் பாலிக்க வேண்டும் என்று முதலில் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.  கும்பாபிஷேகத்துக்கு எல்லாருமே சொல்ற காரணம் ஆகமம்தான்.  ஆகமத்தை மீறக்கூடாது மட்டுமில்லே அது சமஸ்கிருதத்திலேதான் இருக்கு.  தமிழ்லே கிடையாதுனு காரணத்தை அடுக்கிண்டு போறா. அப்படீன்னா ஆகமம்னா என்ன? அது பெரிய சிதம்பர ரஹஸ்யமா?  இது தெரிஞ்சுதுன்னா குடமுழுக்கா கும்பாபிஷேகமாங்கறதை நாம்பளே தீர்மானிச்சுக்க முடியும்.

இந்தியாவிலே மட்டுமில்லாம இந்தோனேஷியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற அந்நிய தேசங்களிலும்  ஏன் பாகிஸ்தான், துபாய், வங்காள தேசம், மலேசியா போன்ற இஸ்லாமிய தேசங்களிலும் சிவன், பார்வதி, நாராயணன், லஷ்மி, கிருஷ்ணர், வினாயகர், முருகன், மாரியம்மன்   போன்ற தெய்வங்களின் வழிபாடு நடந்திண்டுதான் இருக்கு. இது இல்லாம நவீனத்துவம் வாய்ந்த கோயில்களாக ஹரே கிருஷ்ணா இயக்கத்தவரின் கோயில்களும், ஸ்வாமி நாராயண் பிரிவினரின் அக்ஷர்தாம் கோயில்களும், பிர்லா மந்திர்களும், வேறு பல கோயில்களும் இருந்து வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள கோயில்களும், ஹரே கிருஷ்ணா கோயில்களும், அக்ஷர்தாம்களும்  கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல் செயல்பட்டு வருவதோடு வழிபாட்டுக்காக  மட்டுமின்றி இதர சமூக நிகழ்ச்சிகளுக்காக  ஜனங்கள் கூடும் இடமாகவும் இருக்கிறது. அக்ஷர்தாம் கோயில்கள் எல்லாமே பஞ்சாக்ஷர(?) சாஸ்திரப்படி கட்டப்படுவதாக சொல்லப்பட்டாலும் அவை யாவுமே  கிட்டத்தட்ட பெரிய மால் மாதிரிதான் இருக்கு. இந்த கோயில்களில் எல்லாம்  ஆகமத்துக்கு இடமேயில்லை. ஆனா பூஜை புனஸ்காரத்தை வழக்கமா நடத்திண்டு வரா. இன்னும் சொல்லப்போனால் பழைய மதராஸ் ராஜதானிக்கு வெளியே இந்தியாவிலே எந்தப் பகுதியிலேயும் இந்த ஆகமம் ஈகமம்ங்கற பேச்சே கிடையாது.  கேரளத்தில் பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திலே கூட ஆகமத்துக்கு வேலையில்லை.  

ட ஆகமத்துக்கு வேலையில்லை.   கோயிலை எந்த இடத்தில் எப்படி கட்டணும், ஸ்வாமி சிலைகளின் அமைப்பு முறை, எந்தந்த இடத்தில் பூஜிக்கலாம்,  எதை நைவேத்யம் செய்யலாம் என்கிற விவரங்கள்  அடங்கிய யூஸர் மேனுவல்தான் ஆகமமேயொழிய வேறில்லை. குழந்தை பிறந்து வளர்ந்து வருவதை நேரில் பார்த்த பிறகுதான் குழந்தை வளர்ப்பு பற்றி டாக்டர் பெஞ்சமின் ஸ்போக் எழுதியிருக்கிறார் என்பதை இத்தருணத்தில் ஞாபகத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.  சிவன் கோயிலுக்கு 28 ஆகமங்களும் 207 உப ஆகமங்களும் இருக்கு. இப்ப காமியாகமம் காரணாகமம் என்கிற ரெண்டு மட்டுமே இந்த கோயில்கள்லே அனுஷ்டானத்திலே இருக்கு.  நமக்கில்லை ஆனா தீட்சதர்களுக்குத்தான் சொந்தம்னு டெல்லிப் பஞ்சாயத்திலேயே தீர்மானிக்கப்பட்ட தில்லை நடராஜர் கோயில்லே மகுடாகமம் மட்டும்தான் இருக்கு. வைஷ்ணவர்கள் வைகானஸம் பாஞ்சராத்ரம் என்ற இரண்டு வழிபாட்டு முறைகளுக்குரிய ஆகமத்தை கொண்டிருக்கா. காலதேச வர்த்த மானத்துக்கு தக்கமாதிரி ஆகமம் மாறிண்டு இருக்கு. இன்னார்தான் உள்ளே வரலாம் போகலாம்னு இருந்தது போய் ஸகல ஜனங்களுக்கும் கடவுள் ஸந்நிதியிலே இடம் இருக்குங்கறதே இதுலே மிகப் பெரிய மாற்றம்னு சொல்ல முடியும். அதுவும் இல்லாம இன்னார்தான் மந்திரத்தை கேட்கணும் சொல்லணும் இல்லேன்னா காதிலே ஈயத்தை காய்ச்சி ஊத்தனும்னு  சொல்லிண்டு இருந்தது போய் ஸகல ஜாதிகளும் மந்திரங்களை கேட்கிறா, சொல்றா, தவிர பொஸ்தகமா போட்டு பாராயணமும் செய்யறா. வழிபடற ஜனங்களோட மனோ நிலைக்கு ஏற்பதான் இந்த மாற்றங்கள் வந்திருப்பதாலே  கோயிலுக்கு வர ஜனங்களோட எண்ணிக்கை அதிகமாயிண்டு இருக்கு.

அதே மாதிரி,  இந்த மாதிரி ஆகமம்னு சொல்லிண்டு இருக்காம அவங்கவங்களுக்கு வழிபாடு நடத்தறதுக்கு சவுகரியமாக இருக்கறா மாதிரி ஆலமரத்தடி அரசமரத்தடி மட்டுமில்லாம அப்பார்ட்மெண்ட்டுலேயும் சின்னதா வினாயகரையோ சாஸ்தாவையோ  வைச்சு பூஜிக்கறா. போற்றி, அகவல் மாதிரி புஸ்தகங்களை வைச்சிண்டு பாண்ட் மேலே துண்டைக் கட்டிண்டு புல்லோ  பூணலோ இல்லாம அவங்களுக்கு தெரிஞ்ச பாஷையிலே முறையிலே பூஜை பண்ணறாங்க. தெய்வானுக்ரஹத்தைத் தவிர வேற எந்த அனுகூலத்தையும் எதிர்பார்க்காமத்தான் இதைச் செய்யறாங்கறதை சித்த அழுத்தமாகவே சொல்லணும். இந்த மாதிரியான முறைகள்தான் வழிபாட்டை ஜனநாயகப்படுத்தறது.  ஆகமந்தான் பிரதானம், வழிபாடுங்கறது அடுத்தாப்லேனு சொல்லிண்டு இருக்கற இடத்திலே நடக்கற ஆகம மீறலை பட்டியல்போட்டா இப்பத்திரிகையில் இடம் போறாது. இருந்தாலும் பிரதானமாக இருக்கற ஆகம மீறல்களை நாம்ப தெரிஞ்சுக்கணும்.   சிவன் வேற சாமி, விஷ்ணு வேற சாமி, பிரம்மா இன்னொரு சாமி. இவங்களுக்கு ஒண்ணா கோயில் கட்டக்கூடாதுங்கறது ஆகமத்தோட பிரதான விதி. அப்படீன்னா தி.நகர்லே இருக்கற ஜகத் பிரசித்தி பெற்ற சிவா விஷ்ணு கோயில் அஸ்திவாரமே கேள்விக்குரியது.    

சமுத்திரத்திலேயோ சமுத்திரக் கரையிலோ கோயில் கட்டி பூஜிக்கக்கூடாது.  இப்படிப்பார்த்த திருவான்மியூர்லே குடி கொண்டிருக்கிற அந்த அம்மா அஷ்டலக்ஷ்மியும் தப்பான இடத்திலே இருக்காங்கனு ஆகமம் சொல்றது.   நவக்கிரஹம் வைச்சு வழிபாடு நடத்தறது எந்த ஆகமத்திலேயும் சொல்லப்படலே.   சிவன் கோயில்லே ஆஞ்சநேயருக்கும் ஐயப்பனுக்கும் சன்னதி வைப்பதும், பெருமாள் கோயில்லே தும்பிக்கையாழ்வார்ங்கற பெயரிலே பிள்ளையாருக்கு சன்னதி வைப்பதும் அப்பட்டமான ஆகம மீறலாகும்.    ஸ்டாச்யூ ஆஃப் லிபர்டி மாதிரி ஆஞ்சநேயர், முருகன், பெருமாள்  உருக்களை வைக்கக்கூடாதுங்கறது ஆகம நியதி.   ஒரு அடி சாமிக்கு வைக்கற நைவேத்யத்தையே ஒம்போது அடி சாமிக்கு காட்டக்கூடாது.   ஒரே நைவேத்யத்தையே ராஜராஜன் கட்டினபோது அளித்த அதே வஸ்திரத்தால் மூடி மறைத்து கோயிலில் கூடி கொண்டிருக்கும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும் நைவேத்யம் செய்வது என்பது ஆகம மீறலின் உச்சமாகவே இருக்க முடியும். மொத்தத்தில் அன்றாட ஆகம விதி மீறல்ங்கறது சிவ வைஷ்ணவ வேறுபாடு இல்லாம வழக்கமாவே நடைமுறையில் இருந்துண்டு இருக்கு.   ஆறு கால பூஜை புனஸ்காரத்துக்கு பிறகும், வந்தவா போனவா பேரிலே அர்ச்சனை செய்யறது; மடப்பள்ளியில் சமைக்காமல், வெளியிலே சமைச்சு நைவேத்யம் செய்யறது; கோயில்லே பத்துக் கடை போட்டு, பிரஸாதத்தை விற்பனை செய்யறது; கோடியர்ச்சனை, ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யறது; ராப்பத்து பகல் பத்து உற்சவம், கருட சேவை நடத்துவது; வைகுண்ட வாசல் திறப்பது; அறுபத்து மூவர்,  அதிகார நந்தி, சூர சம்ஹாரம், ஆருத்ரா உற்சவங்களை நடத்துவது  நெய்த் தீபம் ஏற்றுவது; மாவிளக்கு போடுவது; அடிப்பிரதக்ஷ்ணம், அங்கப் பிரதக்ஷ்ணம் செய்வது; கல்லாச் சாவி, கார் சாவி, ஸ்கூட்டர் சாவி, சைக்கிள் சாவி போன்றவற்றை மட்டுமின்றி, விக்ரம் பிரக்யான் போன்ற சந்திராயண் சமாச்சாரங்களையும் பூஜித்து தருவது; கூறைப் புடவையையோ அல்லது திருமாங்கல்யத்தையோ அம்பாளுக்கு சார்த்தி மண மகளிடம் அளிப்பது; ஆங்கிலப் புத்தாண்டு அன்று சிறப்பு வழிபாடு நடத்துவது; மாடர்ன் தியேட்டர்ஸோட ஒரு படத்திலே கொகையை தெறக்கறதுக்கு வீரப்பா ஒரே மந்திரத்தை உச்சாடணம் செய்வார். அது மாதிரி எல்லா சாமிக்கும் எல்லா நேரத்திலேயும் சுக்லாம் பரதரம் என்றோ கணாணாம்த்வா கணபதிம்னு ஒரே மந்திரத்தை ஆரம்பிச்சு பூஜிக்கறது எல்லாமே ஆகம மீறல்தான். 

இருந்தாலும் வழிபாட்டுக்கு வரக்கூடிய மக்களின் மனோ நிலைக்கும் கால தேச வர்த்தமானத்துக்கும் தக்கபடி  இதெல்லாம் தப்பு இல்லைங்கற அபிப்ரா யத்தின் பேரிலேதான் இது தொடர்ந்து வருது. அதுனாலேதான் இந்த ஆகம மீறல்களை சங்கராச்சார்யார்களோ இதர  மதச்சாரியார்களோ கண்டு கொள்ளலைனு சொல்ல முடியும். தவிர அவங்கள்ளாம் நிர்வ கிக்கிற கோயில்களிலும் இது இருக்கு. ஒரு வழியிலே முன்னர் சொன்னா மாதிரி  தெய்வ வழிபாட்டை ஜனநாயகப்படுத்தும் பிரம்மாண்டமான செயல்பாடாகவே இந்த ஆகம மீறல் இருக்குங்கறது எல்லோருடைய அபிப்ராயமாகும்.   அப்படி இருக்கும்போது நாம்ப நெருங்கி கும்பிடற சாமிக்கு நாம்ப பேசற பாஷையிலே வழிபாட்டை நடத்தறதுலே என்ன தப்பு? இது இன்னும் விரிவான அளவில் வழிபாட்டை ஜனநாயகப்படுத்தும் என்ற நம்பிக்கையிலேதான் குடமுழுக்கை நடத்தணுங்கற கோரிக்கை வந்திருக்கு.  காலதேச வர்த்தமானத்துக்கு தக்கபடி ஆகமம் மாறிண்டு வரதுனாலே குடமுழுக்கையும் அப்படி நடத்தறதினாலே எதுவும் குடிமூழ்கிப் போகாது. சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, லக்ஷ்மி, மாரியம்மா, வினாயகர், சாஸ்தா, முருகன் போன்ற இத்யாதி தெய்வங்கள் கடந்த காலங்களைப் போலவே  இந்தியாவில் மட்டுமின்றி அண்ட சாராசரத்தில் உள்ள ஸர்வ ஜனங்களுக்கும் சுபிட்சத்தையும் ஆயுள் ஆரோக்கியத்தையும் வாரி வழங்கத்தான் செய்வார்கள். 

ஆனா மதுரை, சென்னையிலே இருக்கிறவர்களுக்கு மட்டுமில்லே டில்லியிலே இருக்கிறவர்களும்  இந்த சாமிங்களை யாரோ தூக்கிண்டு போயிடப்போறாங்களோன்னு நெனச்சு கும்பாபிஷேகம்னு சொல்லியிருக்கானு நெனக்கிறேன்.    ஆனா  சமயபுரம் மாரியம்மா, மாங்காடு காமாட்சியம்மா, திருவேற்காடு கருமாரியம்மா, பழனிமலை ஆண்டவர், செந்தூர் வேலன்  போன்ற தெய்வங்களுக்கெல்லாம் பிராமணர் அல்லாதவர்களால் ஆகமம் அல்லாத பூஜை காலங்காலமாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால் முப்பது நாற்பது  வருஷங்களில் நிலைமை தலை கீழாய் மாறி விட்டது. இதுவே சமீபத்திய வரலாற்று உண்மை.   கடைசியாக ஒரு புதுக்கவிதை. ரொம்ப வருஷத்திற்கு முன்னாடி படிச்சது. இப்போ பொருத்தமா இருக்குமா இல்லையாங்கறது வாசகரோட மனோதர்மத்தைப் பொறுத்தது.  

வரம் வேண்டி
தவமிருந்த முனிவர் முன்னே
இறைவன் வந்தார்.
என்ன வரம் வேண்டும்
கேளுமய்யயா என்றார்.
அது தெரியாம 
நீர் என்ன கடவுள்!