tamilnadu

img

டெல்லியில் டபிள்யூடிஓ அமைச்சர்கள் மாநாடு

உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ) உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் தலைநகர் டெல்லியில் மே 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இக்கூட்டத்தில் 25 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இத்தகைய கூட்டத்தை டெல்லியில் நடத்துவதற்கு ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் மத்திய வர்த்தக அமைச்சகம் அனுமதி பெற்றுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போதிலும் சர்வதேச அளவிலான இந்தக் கூட்டம் நடத்த அனுமதிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் சில நாடுகள் மேற்கொண்டுள்ள தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. ஜெனீவா கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகள் தொடரலாம் என வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்த நாடுகள் மேற்கொண்டுள்ள வர்த்தகப் போர் காரணமாக சர்வதேச அளவிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கும் என்று சமீபத்தில் டபிள்யூடிஓ எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவிலான வர்த்தகம் சீராக நடைபெற டபிள்யூடிஓ அவசியம் என இந்திய தரப்பில் வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டபிள்யூடிஓ அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் இந்தியாவில் நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாவது கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது 50 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

சர்வதேச வர்த்தக அமைப்பின் பிரதான பலம் அதை எவ்விதம் மேலும் வலுப்படுத்துவது என்பது குறித்து இந்தியா ஆராயும் என்றும், பியூனஸ்அயர்சில் 2017-ல் ஏற்பட்ட முட்டுக் கட்டையை நீக்கும் முயற்சிகளும் இந்திய தரப்பில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

;