அமெரிக்காவில் மழையால் வெள்ளை மாளிகையில் கீழ்த்தளம் வரை தண்ணீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை கனமழை பெய்தது. ஒரு மாதத்திற்கு பெய்யும் மழை ஒரு மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஓடியது. சாலைகளில் திடீரென காட்டாறு போல பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். சாலைகளில் சென்ற கார்கள் இந்த எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கி நின்றது. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஆர்லிங்டனில் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றில் மேற்கூரை வழியாக தண்ணீர் கொட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டனர். சில இடங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மோட்டார் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகையின் கீழ் தளத்திலும் மழைநீர் புகுந்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.