tamilnadu

img

வெளிநாட்டு வேலைக்கு சென்று சிறையிலிருக்கும் கணவரை மீட்டுத் தர மனைவி கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையன் மகன்  மதியழகன்(47). இவர் கடந்த 2023 ஆம்  ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி வேலை பார்ப்பதற்காக மலேசியாவிற்கு சென்றார்.  இந்நிலையில், மலேசியாவில் வேலைக்குச் சேர்ந்து குடும்பச் செலவுக்கு பணம் அனுப்பி வந்த நிலையில், கடந்த 2024 அக்டோபர் 15 ஆம் தேதிக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மனைவி சசிகலாவுக்கு, மலேசியாவில் இருந்து செல்போன் அழைப்பில் அவரது கணவர் மதியழகன் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள காஜாங் சிறையில் (மலேசியா) இருப்ப தாக தகவல் கிடைத்துள்ளது.  அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அவரோடு சிறையில் இருந்து வெளிவந்த நபர் தெரிவித்துள்ளார்.

 இதனால், பதறிப்போன சசிகலா பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் உதவியை நாடினார். தனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்தை தொடர்பு கொண்டு சிறையில் உள்ள மதியழகனை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்க சசிகலாவிடம் பரிந்துரை கடிதம் கொடுத்து அனுப்பினார். மதியழகனுக்கு பட்டப்படிப்பு படித்த மகன் ஒருவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.