tamilnadu

img

ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்பு - ஐ.நா அறிக்கை

துருக்கி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி இளவரசருக்கு தொடர்புள்ளதாக ஐநா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட் நடத்திய விசாரணையின் முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, சவுதி அரேபியாவின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதில் சவுதி அரசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சவுதி அரசு இதனை மறுத்தது.
 
இந்நிலையில், ஜமால் கசோக்கியின் கொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட், கடந்த ஜனவரி மாதம் துருக்கி சென்றார். அங்கு அவர் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி முதல் அறிக்கையை வெளியிட்டார். அதில், “சவுதி அரேபிய அதிகாரிகளால் முன்னதாகவே திட்டமிடப்பட்டு மிருகத்தனமாக ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரிடம் நடத்திய விசாரணையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை இல்லாதது கவலை அளிப்பதாக உள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆதாரங்களை பெறுவதற்காக, சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வமாக செல்ல அனுமதி வழங்க வேண்டும். ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கை வரும் ஜூன் 26-ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னஸ் கலாமார்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”ஜமால் கசோக்கி படுகொலையில் சவுதி இளவரசர் மொகமத் பின் சல்மானுக்கு தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. எனவே, இந்த கொலை தொடர்பாக ஐ.நா. சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் சர்வதேச விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.