கோவி.பால.முருகு
புத்தகக் காட்சிக்குப் போவாய்-நூல்
புதையலை அள்ளியே வருவாய்!
இத்தரை மீதில் நூல்போல்-அறிவில்
இனிப்பது வேறெது அதுபோல்?
அறிவியல் வரலாறு அறிவாய்-அறிவு
ஆற்றல் அதனால் பெறுவாய்!
அறிஞர் பலரும் போற்றுவார் -நூலின்
அற்புதம் அதனை ஏற்றுவார்!
படக்கதை பாடல்கள் படித்திடு-அதைப்
படித்திடப் பாடிடப் பழகிடு!
மடமை தந்திடும் நூல்களை-உன்
மனதில் இருந்து நீகளை!
கதைகள் காவியம் தேர்ந்தெடு-நல்ல
கருத்துடன் கற்பனை வளர்த்திடு!
எதையும் படித்திடப் பழகிடு-அதில்
ஏற்புடைக் கருத்தைப் பிடித்திடு!
சிறியதோ பெரியதோ உருவில்-நல்ல
செய்தியைத் தந்திடும் பொருளில்!
அறிவில் எதனினும் பெரியது-நூல்
அறிந்திடப் படிப்பதே உரியது!
போர்வாள் அதனினும் கூர்மை-பேனா
புரட்சியைச் செய்தது நேர்மை!
தேர்வாய் அதனின் தூய்மை-வாழ்வில்
தேர்ந்திடு வாக்கில் வாய்மை!