tamilnadu

வாக்கில் வாய்மை

கோவி.பால.முருகு

புத்தகக் காட்சிக்குப் போவாய்-நூல்
    புதையலை அள்ளியே வருவாய்!
இத்தரை மீதில் நூல்போல்-அறிவில்
    இனிப்பது  வேறெது அதுபோல்?

அறிவியல் வரலாறு அறிவாய்-அறிவு
    ஆற்றல் அதனால் பெறுவாய்!
அறிஞர்  பலரும் போற்றுவார் -நூலின்
     அற்புதம்  அதனை ஏற்றுவார்!

படக்கதை பாடல்கள் படித்திடு-அதைப்
    படித்திடப் பாடிடப் பழகிடு!
மடமை தந்திடும் நூல்களை-உன்
     மனதில் இருந்து நீகளை!

கதைகள் காவியம் தேர்ந்தெடு-நல்ல
    கருத்துடன் கற்பனை வளர்த்திடு!
எதையும்  படித்திடப் பழகிடு-அதில்
     ஏற்புடைக் கருத்தைப் பிடித்திடு!
          
சிறியதோ பெரியதோ உருவில்-நல்ல
    செய்தியைத் தந்திடும் பொருளில்!
அறிவில்   எதனினும்  பெரியது-நூல்
     அறிந்திடப் படிப்பதே உரியது!

போர்வாள் அதனினும் கூர்மை-பேனா
     புரட்சியைச் செய்தது  நேர்மை!
தேர்வாய் அதனின் தூய்மை-வாழ்வில்
     தேர்ந்திடு  வாக்கில் வாய்மை!