tamilnadu

கல்லணை கால்வாயிலிருந்து புதுக்கோட்டை பகுதிக்கு தண்ணீர் திறக்கக் கோரி வழக்கு

மதுரை, ஆக. 28 -  கல்லணை கால்வாயிலிருந்து புதுக்கோட்டை நாகுடி பிரிவு பிரதான கால்வாய், திருவாப்படை பிரதான கால்வாய்க்கு 286 கன அடி தண்ணீரை 2020 ஜனவரி மாதம் வரை திறக்கக் கோரிய வழக்கில் பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத் துணைத் தலைவர் கண்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.  அதில்," புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் மூலம் கிடைக்கும் நீரின் மூலம் அறந்தாங்கி தாலுகா, மணல்மேல்குடி தாலுகா ஆவுடையார் கோவில் தாலுகா ஆகிய பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த மூன்று தாலுகாகளில் ஏறத்தாழ 110 நீர்நிலைகள் உள்ளன. இந்த நீர்நிலைகளுக்கு கல்லணை மூலமாகவே தண்ணீர் கிடைக்ககும். 110 நீர் நிலைகளுக்கும் திருவாப்படை கால்வாய், நாகுடி பிரதானக் கால்வாய் ஆகியவற்றின் மூலமே பெரும்பாலான நீர் கிடைக்கும். கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி,  நாகுடி பிரதானக் கால்வாய்க்கு 194 கன அடி நீர் கிடைக்கும். இதன் மூலம் 16 ஆயிரத்து 641. 35 ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெறும். இதேபோல திருவாப்படை கால்வாய்க்கு 92 கனஅடி நீர் கிடைக்கும் அதனால் 6,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக கல்லணை கால்வாயிலிருந்து திருவாப்படை கால்வாய், நாகுடி பிரதானக் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதனால் அதனை நம்பியுள்ள விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, மேட்டூர் அணையிலிருந்து கல்லணை கால்வாய்க்கு 4,500 கன அடி நீர் திறக்கவும், புதுக்கோட்டை நாகுடி பிரிவு பிரதானக் கால்வாய், திருவாப்படை பிரதான கால்வாய்க்கு 286 கன அடி தண்ணீரை 2020 ஜனவரி மாதம் வரை திறக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.  இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி,  அமர்வு இது குறித்து, தமிழக பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.