tamilnadu

img

பி.ஆர். நினைவக கட்டட நிதி திருப்பூரில் ரூ.7.91 லட்சம் ஒப்படைப்பு

திருப்பூர், செப்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகமான, தோழர் பி.ராமமூர்த்தி நினைவக கட்டட நிதியாக, திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் முதல் தவணையாக, ரூபாய் 7 லட்சத்து 91 ஆயிரத்து 450 கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபனிடம் வழங்கப்பட்டது. திருப்பூர் எம்.சி.மஹாலில் செவ்வாய்க்கிழமை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.தங்கவேல் இரண்டாம் ஆண்டு நினைவு தின சிறப்பு பேரவை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர். கணேசன் தலைமையில் நடைபெற்ற இப்பேரவையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடைக் குழுக்கள் சார்பில் வசூலிக்கப்பட்ட தோழர் பி.ஆர். நினைவக நிதி விபரத்தை அறிவித்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உன்னிகிருஷ்ணன் மொத்த நிதி ரூ.7 லட்சத்து 91 ஆயிரத்து 450-ஐ கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய தலைவர் ஏ.கே.பத்மநாபனிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ராஜகோபால், மாவட்ட குழு உறுப்பினர் கு.சரஸ்வதி உள்பட திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கட்சி அணியினர் கலந்து கொண்டனர்.

;