tamilnadu

img

சிறுமி பலியான வழக்கில் குற்றவாளிகள் 8 பேரும் விடுதலை

சென்னை,ஜன.25- தாம்பரம் அருகே பள்ளியின் பேருந்து ஓட்டைக்குள் விழுந்து உயிரிழந்த சிறுமி வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் ஸ்ருதி. இவர் சென்னை சேலையூரிலுள்ள, சீயோன் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார். பள்ளி நிர்வாகத்தின் பேருந்தில் தினமும் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம்.  கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 அன்று வழக்கம் போல ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் வீட்டுக்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது, மாணவி ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை உடைந்தது. அந்த இருக்கையின் அடிப்பகுதியிலிருந்த ஓட்டை வழியாக ஸ்ருதி கீழே சாலையில் விழுந்தபோது அந்த பேருந்தின் சக்கரம் தலையில் ஏறியதில் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்ததார். இது தொடர்பாக, பள்ளி தாளாளர் விஜயன், சகோதரர்களான ரவி, பால்ராஜ், பேருந்து ஓட்டுநர் சீமான், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், பேருந்து உரிமையாளர் யோகேஷ் சில்வேரா மற்றும் கிளீனரான 17 வயது சிறுவன் உள்ளிட்ட 8 பேரை பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.  இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  அரசு தரப்பில் 35 சாட்சிகளும், பள்ளி தரப்பில் 8 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டன. இந்த வழக்கில் அரசு சார்பில் 35 சாட்சிகள் அளிக்கப்பட்டாலும் முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதால் புகார்கள் நிரூபிக்கப்பட முடியவில்லை.  தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கு பத்து ஆண்டுகாலமாக நடந்த நிலையில் புதனன்று(ஜன.25) அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதி காயத்ரி தீர்ப்பளித்தார். இது மக்களிடையே பேர்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.