tamilnadu

img

ஆர்எஸ்எஸ் பேர்வழிகள் 16 பேர் கைது!

தில்லியில் நடந்த வன்முறை வெறியாட்டம்

புதுதில்லி, ஜூன் 26 - மத அடிப்படையில் மோடி அரசு  கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, வடகிழக்கு தில்லியில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அவர்கள் மீது பாஜக-வினரும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும், கடந்த பிப்ரவரி மாதம் கொடூரமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர்.  இந்த வன்முறையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.  ஆனால், வன்முறைக்கு காரணமான சங்-பரிவாரத்தினர் யாரும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் போலீசாரால் தொடர்ந்து தப்பவிடப்பட்டு வந்தனர். இந்நிலையில், தில்லி வன்முறையில் பிப்ரவரி 25 அன்று தனது தந்தையின் உயிரைப் பலி கொடுத்த சஹீல் பர்வேஸ் என்பவர் கொடுத்த விரிவான புகாரின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 16 பேர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.

 “எனது சக்தியை எல்லாம் திரட்டி இந்தப் புகாரை அளிக்கிறேன். எனவே, குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் எனக்கும் எனது குடும்பத்திற்கும் தகுந்த பாதுகாப்பு தர வேண்டும்” என்று கடந்த மார்ச் 19 அன்று தில்லியின் இடாக் நிவாரண முகாமிலிருந்து புகாரளிக்கும்போது சஹீல் பர்வேஸ் தெரிவித்திருந்தார். தனது தந்தையின் படுகொலை தொடர்பான வழக்கில், முக்கிய குற்றப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த பின்னணியிலேயே, 20 பேரை விசாரணைக்கு உட்படுத்திய போலீசார், அவர்களில் 16 பேர்களை, கொலை (பிரிவு 302), கலவரம் செய்தல் (பிரிவு 147), கொடிய ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல் (பிரிவு 148), சட்டவிரோதமாக கூடுதல் (பிரிவு 149) மற்றும் குற்றவியல் சதி (பிரிவு 120 பி) ஆகிய பிரிவுகளில் கைது செய்துள்ளனர்.  இவர்கள் தில்லியின் வடக்கு கோண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இது பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆர்எஸ்எஸ் தனது உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது.