ஸ்ரீநகர்,ஆக.6- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து, மத்திய பாஜக அரசு தனது மிருகபலத்துடன் நிறைவேற்றி அராஜகம் புரிந்துள்ளது.இதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தும் உடனடியாக ஒப்புதல் தெரிவித்துள்ளார். முன்னதாக, இரவோடு இரவாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட பலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற மக்களவையில் செவ்வாயன்று இந்த விவகாரம் எதிரொலித்தபோது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாங்கள் யாரையும் சிறை வைக்கவில்லை. அவரவர்களின் விருப்பப்படி வீடுகளில் உள்ளனர் என்றார். இந்நிலையில், ஸ்ரீநகரில் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா செவ்வாயன்று கதவை உடைத்துக் கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் அமித் ஷா தெரிவித்ததுபோல், சுதந்திரமாக என் விருப்பம்போல் நான் வீட்டில் அடைந்து கிடக்கவில்லை. என் வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே போக முடியாது. உள்ளே வேறு யாரும் வர முடியாது. என் வீட்டு வாசலில் போலீஸ் டி.எஸ்.பி. ஒருவர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளார். இப்போதுகூட நான் கதவை உடைத்துக் கொண்டுதான் உங்களை சந்தித்துப் பேச வந்திருக்கிறேன். அவர்கள் (மத்திய அரசு) ஜம்மு-காஷ்மீரையும் லடாக்கையும் பிரித்து விட்டனர். ஆனால், இதயங்களை பிரிக்க முடியுமா? இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்துவிட முடியுமா? என்னுடைய இந்தியா மதச்சார்பற்ற, ஒருமைப்பாட்டு உணர்வு கொண்ட அனைவருக்குமேயான நாடு என்று நான் நினைத்திருந்தேன். இதற்காக கடந்த 70 ஆண்டுகளாக போராடிய நாங்கள் இன்று குற்றவாளிகள் போல் நடத்தப்படுகிறோம்.
தற்போது ஜனநாயக மரபுகள் புறக்கணிக்கப்பட்டு, கொடுங்கோன்மை அதிகாரம் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.எழுத்துப்பூர்வமான எந்த உத்தரவும் இல்லாமல் நாங்கள் வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் கற்களை வீசும் கும்பலை சேர்ந்தவர்களோ, கொலையாளிகளோ கிடையாது. சட்டத்தின்மீது நம்பிக்கை கொண்ட நாங்கள் துப்பாக்கி கலாச்சாரத்தை எப்போதுமே தேர்வு செய்ததில்லை. காந்தியின் பாதையை மட்டுமே நாங்கள் பின்பற்றி வந்திருக்கிறோம். இப்போது இப்படி நடப்பது ஏன்? அதற்கான காரணம் என்ன? இவ்வாறு அவர் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார்.