பிரேசில் பல்பொருள் அங்காடியில் கருப்பினத்தவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ என்பவர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இது குறித்து வீடியோ காட்சிகள் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சிகளில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த மக்கள் பல்பொருள் அங்காடி முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் வருத்தம் தெரிவித்ததோடு, இதில் சம்பந்தப்பட்ட காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பிரேசில் முழுவதும் கருப்பினத்தவர் உரிமை மீட்பு முழக்கங்கள் எழுந்துள்ளது. பிரேசில் நாட்டில் ஏற்கனவே கருப்பின மக்களுக்கான உரிமை குறித்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.