மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக ஏபிவிபி தலைவர் நியமிக்கப்பட்டத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ABVP) தென் தமிழகத் தலைவர் சவிதா ராஜேஷை நியமித்துள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
இந்த நிலையில், கல்வி நிலையங்களை காவிமயமாக்கவும், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தவும் நிர்வாக துறைகளிலும் சங் பரிவார் அமைப்பினர் ஊடுருவ முயற்சிப்பதை கண்டித்தும், ஆளுநரின் அத்துமீறல் நடவடிக்கையான சிண்டிகேட் நியமன உறுப்பினரை திரும்பப் பெற வலியுறுத்தியும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது, மாவட்டச் செயலாளர் சைலஸ் அருள்ராஜ் மற்றும் கிளை நிர்வாகிகள் பாலகுமார், தினேஷ், அஜய் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.