தஞ்சாவூர், ஜூன் 19- தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசானது பத்து மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து கொரோனோ தொற்று நோயிலிருந்து மாணவர்களை பாதுகாத்து அரசாணையை வெளியிட்டமைக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். அதே வேளையில், தமிழக அரசானது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை வெளியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் பெரும் பகுதியான தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் - கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகள் என்பது குறைந்த பாடப் பகுதியை கொண்ட UNIT TEST, தனியார் நிறுவனத்திடம் வாங்கப்பட்ட கேள்வி தாட்களை கொண்ட தேர்வு முறை மற்றும் விரிவாக பாடம் நடத்தும் முறையை தவிர்த்து, மாறாக NEET தேர்வுக்கான பயிற்சி அளித்தல் போன்ற முறைகளை கையாண்டு வருகின்றனர். இவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை கையாளுவது என்பது மிகக் குறைவான நிலையே ஆகும். மேலும், சில தனியார் பள்ளிகள் சமீப காலமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை சட்டவிரோதமான வழிகளை கையாண்டு திருத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகிறது என்று காட்சி மற்றும் அச்சு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன. அதனால் தமிழக அரசானது பத்து மற்றும் முதலா மாண்டு மேல்நிலைக் கல்வி மாணவர்களின் தேர்ச்சியை மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்காமல், வருகை சான்று அடிப்படையில், அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்புடன் தேர்ச்சி அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.