கரூர், ஜூலை 7- கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் செவிலியர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை பலமுறை கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலாவிடம் முறையீடு செய்தும் தீர்வு ஏற்படாத நிலையில் கடந்த ஜூன் 5-ம் தேதி வெளிநடப்பு போராட்டம் செய்தனர். இதையடுத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் மற்றும் செவிலியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் மீது விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதன்பின் கடந்த 11-ம் தேதி செவிலியர் சங்க நிர்வாகிகள் நல்லம்மாள், செல்வராணி, கார்த்திக், தனலட்சுமி மற்றும் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மு.சுப்பிரமணியன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி கடந்த ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்ட நாட்களில் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு தீர்வு காண தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து முறையீடு செய்தனர். இதையடுத்து ஜூன் 13-ம் தேதி மாலை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் முன்னிலையில் அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்றும், 5 ஊழியர்களின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்திட சாதகமான நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோட்டாட்சியர் நேரிடையாக கொடுத்த உறுதி மொழியின் அடிப்படையிலும், மக்கள் நலன் கருதி காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால் நிர்வாகிகள் 5 பேரின் தற்காலிக பணி நீக்கம் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இதனை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு கண்டிப்பதுடன், பழிவாங்கும் நடவடிக்கையால் தற்காலிக பணி நீக்கத்தில் இருந்து வரும் அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மு.சுப்பிரமணியன் மற்றும் செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் நல்லம்மாள், செல்வராணி, கார்த்திக், தனலட்சுமி ஆகியோரை மீளப் பணியமர்த்தி சுமூக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில அளவிலான முறையீடு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர்(பொ) ஆ.செல்வம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் என்.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர்கள் தமிழ்செல்வி, மு.சுப்பிரமணியன், பார்த்திபன், மாநில செயலாளர்கள் பன்னீர்செல்வம், ராஜ்குமார், செளந்தரராஜன், மாவட்ட பொருளாளர் தங்கராஜ், மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் ஆகியோர் பேசினர். செயலாளர் கே.சக்திவேல் நன்றி கூறினார்.