tamilnadu

img

ஸ்டாலின் அறிவிப்பு: கி.வீரமணி வரவேற்பு....

சென்னை:
7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் படி அரசுப் பள்ளிகளில் பயின்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று அறிவித்ததை வரவேற்றுள்ள திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, “அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு காரணமாக 405 மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சி நீடிக்க முடியாத ஓர் அவலநிலை ஏற்பட்டது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்குக் குறைந்த கட்டணம், தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க் கட்டணம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படித்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள பெரும்பாலான மாணவர்கள் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவ்வளவுத் தொகையைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.கண்ணீரும், கம்பலையுமாக  அந்த மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கூறியதை தொலைக் காட்சிகளில் பார்த்த அனைவரும் கண்ணீர் விடாத குறைதான்.இடங்கள் கிடைத்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், அந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கான கட்டணத் தொகையை திமுக ஏற்கும் என்று அறிவித்திருப்பது - போற்றி வரவேற்கத்தக்கது.சமூக நீதியில் திமுக வுக்கு இருக்கும் அபரிமிதமான அக்கறை யையும், ஈடுபாட்டையும் வெளிப்படுத்தக் கூடிய ஆக்கப்பூர்வமான - காலத்தால் அறிவிக்கப்பட்டுள்ள - காலாகாலமும் நின்று பெருமையுடன் பேசப்படக் கூடிய சீரிய முடிவாகும் என வரவேற்றுள்ளார்.