திருப்பத்தூரில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
8ஆவது ஊதியக்குழுவை உடனே அமைக்க வேண்டும், புதிய மற்றும் ஒருங்கிணைந்த பென்சன் திட்டங்களை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரயில்வேயில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வு கணக்கீட்டு புள்ளியில் மோசடி செய்து டிஏவை குறைக்க கூடாது. பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்த அனைத்து தொழிலாளர்களுக்கு இடமாற்றம் உத்தரவை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு) திருப்பத்தூர் கிளைகள் சார்பாக எம்.சிலம்பரசன், சி.ரவி ஆகியோர் தலைமையில் இரண்டு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கோட்ட தலைவர் எம்.முத்துகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கிளை நிர்வாகிகள் கதிர்வேல், சங்கர், அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.