tamilnadu

img

ஜூனியர் வழக்குரைஞர்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை வழங்க உத்தரவு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பணியாற்றும் அனைத்து ஜூனியர் வழக்குரைஞர்களுக்கும் குறைந்தபட்ச உதவித்தொகையாக ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2001இல் நடைமுறைக்கு வந்த வழக்குரைஞர்கள் நல நிதி சட்டத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரிய மனு மீதான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, முந்தைய தலைமுறையினர் சந்தித்த போராட்டங்களை இளம் வழக்குரைஞர்கள் சந்திக்கும் நிலையை ஏற்படுத்தக் கூடாது. இளம் வழக்குரைஞர்களுக்கு வலுவான இடத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். இளம் வழக்குரைஞர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 

அந்தவகையில் அவர்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், சென்னை, மதுரை, கோவை போன்ற பெருமாநகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ. 20,000 உதவித்தொகையும், பிற மாவட்டங்களில் பணியாற்றும் இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ. 15,000 உதவித்தொகையும் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், இந்த உதவித்தொகையானது அடிப்படை வாழ்க்கைச் செலவு மற்றும் மாநிலத்தின் நிலவும் செலவுக் குறீயீட்டை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்திய நீதிபதிகள், ‘ஜூனியர் வழக்குரைஞர் என்ற வரம்பிற்குள் வருவதற்கு யார் தகுதியானவர்கள் என்பதை பார் கவுன்சில் முடிவு செய்யுமாறும், பாலின அடையாளத்தை பார்க்காமல் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர். தொடர்ந்து, நான்கு வாரங்களுக்குள் சுற்றறிக்கையை வெளியிட்டு, உறுதி செய்யுமாறும் வழக்குரைஞர்கள் சங்கங்களுக்கு உத்தரவிட்டனர்.