சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக, மின் விற்பனை ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அதானியை கைது, சிபிஐ விசாரணையை நடத்திட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல்லாயிரம் கோடி லஞ்சம், ஊழலில் சிக்கியுள்ள அதானியை கைது செய்யவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், இந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவம்பர் 28, 2024 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.
சென்னையில் நவம்பர் 27 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கட்சி அணிகளும், அனைத்து தரப்பு பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்ப சிபிஎம் அறைகூவல் விடுத்துள்ளது.